Monday, June 22, 2009

வணங்கா மண்ணின் மனிதாபிமானத்தை கற்பழிக்கும் தெற்காசியக் குண்டர்கள்.



ஈழத்தமிழர்கள் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு திணித்து வரும் ஆக்கிரமிப்புப் போரால் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கையில் வடக்கிக் கிழக்கு மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் அகதிகளாகியும் சிறைப்பட்டுப் போயுள்ளனர்.

அதுமட்டுமன்றி சிங்களப் படைகளால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் வன்முறை ரீதியாகப் பறிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டு இந்திய மற்றும் சீன குத்தகைக்காரர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமன்றி இலங்கையில் தமிழர் தாயக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் சிங்கள அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இராணுவ வல்லாதிக்கத்தையும் தமிழர் தாயகமெங்கும் வலுவாக நிறுவி வருகிறது.

இத்தகைய பின்னணிகளில் ஈழத் தாயக மண்ணுக்குச் சொந்தக்காரர்களும் தாயக மண்ணில் இருந்து சிங்கள மற்றும் 1987 இல் இந்திய படைகளாலும் துரத்தி அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் அகதிகளாகி வாழும் மக்களால் தமது சொந்த உறவுகளான ஈழத்தாயகத்தில் வாழும் மக்களின் அடிப்படை மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கப்டன் அலி என்ற கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மனிதாபிமானப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை.. இந்து சமுத்திரத்தின் ஆதிக்க சக்திகள் இன்னல் படும் ஈழத்தமிழ் மக்களைச் சென்றடையா வண்ணம் திட்டமிட்டு தடுத்து வருகின்றன.

ஐரோப்பிய நாட்டு அரசுகளின் அனுமதியோடு திரட்டப்பட்டு அவர்களின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் கப்பலில் ஏற்றப்பட்டு ஈழத்தை நோக்கிப் அத்தியாவசியப் மனிதாபிமானப் பொருட்களுடன் புறப்பட்ட கப்டன் அலி அல்லது வணங்கா மண் திட்டக் கப்பல் இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடல் எல்லையை அடைந்த போது அங்கு வைத்து சிறீலங்கா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு கொழும்பில் சிறை வைக்கப்பட்டது. அங்கு அது பரிசோதிக்கப்பட்டதில் அதில் மனிதாபிமானப் பொருட்கள் மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக கப்பலில் உள்ள பொருட்களை இறக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மறுத்து.. குறித்த கப்பலை தனது கடலாதிக்க எல்லைக்கு அப்பால் அச்சுறுத்திக் துரத்தி அடித்துக் கலைத்து விட்டது சிறீலங்காச் சிங்களக் குண்டர்கள் அரசு.



//அகதிகளாகிச் சிங்கள வதை முகாம்களில் முட்கம்பிகளிடையே சிறை இருக்கும் தமிழ் மக்கள்.//

அங்கிருந்து போக்கிடமின்றி இந்து சமுத்திரத்தில் திரிந்த மனிதாபிமானக் கப்பல் இறுதியில் ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளாம் தமிழகத் தமிழர்களிடம் அபயம் கேட்டுப் போனது. தமிழகம் அதற்கு வரவேற்பளித்து மனிதாபிமான உதவிகளை துன்பப்படும் மக்களிடம் சேர்க்க முன்வந்தது. இருப்பினும் சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங் கொடான் என்பது போல தமிழக அரசு வரம் கொடுத்தும் இந்திய நடுவன் சோனியா அரசாங்கத்திற்கு அந்தக் கப்பல் மீது சந்தேகம் வந்து தொலைய அது இப்போ அக்கப்பலை அதன் மனிதாபிமானப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து இந்தியக் கடற்படைக் குண்டர்களைக் கொண்டு இந்தியக் கடல் எல்லைக்கு அப்பால் துரத்தி அடித்துவிட உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதே இந்தியா 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட முதல் ஈழத்தமிழர்கள் மீது கரிசணை காட்டுவதாகப் பாசாங்கு செய்து கொண்டு சிங்களச் சிறீலங்காவின் இறையாண்மை எச்சரிக்கையும் மீறி வந்து தமிழர் தாயகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றளவுக்கு அன்று மக்கள் பெரிய அளவு துன்பங்களை அனுபவிக்காத போதும் வான் வழியாக வந்து ரொட்டியும் பருப்பும் போட்டது. அதற்கு பிரான்ஸ் தயாரிப்பு இந்திய விமானப்படை மிராஜ் விமானங்கள் பாதுகாப்பளித்தன என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

ஆனால் இன்றோ சோனியா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி இந்திய நடுவன் அரசு தமிழர்களுக்கு தமிழர்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவியையே தமிழர்களைச் சென்றடைய விடாமல் நடுக் கடலில் வைத்து தனது கடற்படைக் குண்டர்களைக் கொண்டு கற்பழித்து அராஜகம் புரிவதோடு ஈழத்தமிழர்களின் பட்டினிச் சாவுகளையும் ரசித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா 1987 இல் போட்ட கணக்கின் படி ஈழத்தமிழர்கள் அதற்கு அடிமைகளாக மாற மறுத்து சுதந்திர தமிழீழம் நோக்கிப் போராடியதைத் தவிர இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எந்த தீமையும் செய்திலர்.(இந்தக் கப்பல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி கொண்டு செல்லும் கப்பல் அல்ல. ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளும் இன்றில்லை என்ற நிலையை இந்தியா முன்னின்று உருவாக்கிவிட்டுள்ள பின்னணியை இங்கு கவனத்தில் கொள்வது நன்று.).

இருப்பினும் இந்திய இராணுவமும் இந்திய நடுவன் அரசுகளும் ஈழத்தமிழர்களுக்குச் செய்த தீமைகள் சிங்களப் பேரினவாதிகள் செய்தவைகளைக் காட்டினும் ஒரு படி அதிகம் என்பதை சொல்லமாம். இருந்தாலும் அதனை எல்லாம் மன்னிக்க ஈழத்தமிழினம் தயாராக இருந்தும் ஈழத்தமிழர்கள் வரலாறு காணாத துயர் சூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்கள் மீது இந்திய நடுவன் அரசு வெளிப்படுத்தி வரும் காட்டுமிராண்டித்தனத்துடன் கூடிய செயற்பாடுகள் இந்தியாவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி வருகின்றன. இதுதான் உண்மையில் பஞ்ச சீல இந்தியாவின் உண்மை முகமும் கூட. இதை இந்த உலக மக்கள் இன்று சரியாக இனங்காண வேண்டும்.

இன்றைய நிலையில் அவலப்பட்டுள்ள மக்களை நோக்கிச் செல்லும் மனிதாபிமான உதவிகளை தடுக்கும் இந்தியா, சிறீலங்கா போன்ற மனிதாபிமானமற்ற தேசங்கள் உலகில் வேறு இருக்குமோ என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. இந்த இந்தியா இந்து சமுத்திரத்தில் பிராந்திய வல்லரசானால் அங்குள்ள மக்களில் நிலை என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

இன்றைய இக்கட்டான இச்சூழலில்.. இந்தியாவின் இந்த நிலையை மாற்றி அமைக்கப் போகும் சக்தி அல்லது சக்திகள் யார்..??! அவர்களுடன் துணை சேர்ந்து தமது தலைவிதியை மாற்றி அமைப்பது பற்றி சிந்திப்பதைத் தவிர ஈழத்தமிழர்களுக்கு மாற்று வழி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவை நம்பி ஈழத்தமிழர்கள் தம் வாழ்விழந்தது போதும் என்ற நிலையையே இந்தியா இன்று ஈழத்தமிழர்கள் விடயத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாக்கம் தொடர்புபட்ட செய்தி ஒன்று......

வணங்காமண் உதவிக் கப்பல் மீது கடற்படை சந்தேகம் - சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:40 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க