Saturday, July 18, 2009

தமிழ் தேசியம் பேரினவாதமா..??!



//சிங்களப் பேரினவாதம் - படம்: தமிழ்நேசன்.ஆர்க்//

இணைய உலகில் சில மரை கழன்ற தம்மை அரசியல் விற்பன்னர்களாகக் காட்ட விளையும் தமிழ் தேசிய விரோதிகள் சிலர் தமிழ் தேசியத்தை (Tamil nationalism) பேரினவாதமாக இனங்காட்டி சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு (Sinhala Chauvinism) மறைமுகமாகக் கொடி பிடிக்க விளைகின்றனர்.

தமிழ் தேசியம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான.. தமிழ் மொழி சார்ந்த.. தமிழ் இனம் சார்ந்த அதன் பாரம்பரிய நிலம், கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த அடையாள வாதமாகும்.

சிங்கள பெளத்த தேசிய வாதம் என்பது சிறீலங்காவைப் பொறுத்தவரை ஒரு தேசத்தை ஆளுகின்ற பெரும்பான்மை இனத்தின் அதன் ஆளுமையை, அதிகார வெறியை.. சிறுபான்மை இனங்களை அடக்கி ஒடுக்கும் தன்மையை வெளிப்படுத்தும் பேரினவாதமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிங்களத் தேசியத்தை கூட அது பேரினத் தேசியமாகவே இனங்காட்ட விளைகிறது..!

தமிழ் தேசியத்தை பேரினவாதம் என்று கூறுவார்களானால் சிறீலங்காவில் முஸ்லீம் காங்கிரஸ் முன்னெடுக்கும் முஸ்லீம் இஸ்லாமிய மத அடிப்படை வாதமும் ஒரு பேரினவாதமாகவே கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமன்றி... தமிழ் தேசிய வாதம் ஒரு பேரினவாதமாக அடையாளப்படுத்தப்படின்.. இந்திய தேசிய வாதமும் பிராந்திய பேரினவாதமாகக் காட்டப்படலாம். இவ்வாறு உலகில் உள்ள அனைத்து தேசிய வாதங்களையும் பேரினவாதமாக இனங்காட்டலாம்..!

உண்மையில் ஈழத்தில்.. இந்தியாவில் தமிழ் தேசிய வாதம் என்பது.. தமிழினத்தின் பூர்வீக இருப்புக்கான அதன் சுயநிர்ணய உரிமைக்கான அடையாள வாதமாகக் கொள்ளப்படுகிறதே அன்றி.. அது மற்றைய இனங்களின் தேசிய இருப்பை நிராகரிக்கப் பயன்படுத்தப்படவில்லை.

சிங்கள பெளத்த பேரினவாதி மகிந்த ராஜபக்ச, அண்மைய சிங்கள இராணுவத்தின் மேலாண்மை தமிழர் தாயகத்தில் எழுச்சி பெற்ற பின்.. சொன்னது "சிறீலங்காவில் சிறுபான்மையினரே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன்" என்பது. இது தான் சிங்கள பேரினவாதம். இதை தமிழர்களில் எவரும் சிங்களவர்களையோ முஸ்லீம் இஸ்லாமியரையோ பார்த்துச் சொன்னது கிடையாது.

ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அதற்கான பாரம்பரிய அடையாளங்கள்.. விழுமியங்கள்.. தனித் தன்மைகள்.. பூர்வீக நில இருப்புகள்.. மொழி இருப்புக்கள் இருக்கின்றன. அதை தேசிய வாதங்களை முன்னெடுப்பவர்கள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதனை வலியுறுத்தும் வகையிலேயே தமிழ் தேசிய வாதம் இருக்கிறது. அது பேரினவாதம் அல்ல. ஆனால் சிங்கள பெளத்த பேரினவாதிகள்.. சிறிய தேசிய இனங்களின் தேசிய அடையாளங்களைக் கூட கலைத்து அவற்றை பேரினவாதத்தால் சிங்கள பெளத்த பேரினத்துக்குள் உள்ளிளுக்கவே முயல்கின்றனர்.

இலங்கை ஒரு பல் தேசிய இன மக்கள் வாழும் தேசம் என்றே உலகால் இனங்காணப்படுகிறது. அந்த நிலையை அழிக்கவே சிங்களப் பேரினவாதிகள் முனைகின்றனர். சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்தர்களின் தேசம் என்பதே பேரினவாதிகளின் நிலைப்பாடு. அதை நிறுவிக் கொள்ளும் வகையிலேயே சிங்களத் தலைமைகளின் பெளத்த துறவிகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதை சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூட வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.

ஆனால் தமிழ் தேசியத்தைப் பொறுத்தவரை.. தமிழீழத்தைப் பொறுத்தவரை அது உண்மையில் முஸ்லீம் இஸ்லாமிய வாதத்தை கூட அங்கீகரிக்கிறது. சிங்கள மக்களின் தூய தேசிய வாதத்தை (பேரினவாதக் கலப்பற்ற நிலையில்)அங்கீகரித்து நிற்கிறது. அப்படி இருக்க எப்படி தமிழ் தேசியம் பேரினவாதமாகும்.

அதுமட்டுமன்றி சிறீலங்காவைப் பொறுத்தவரை வடக்குக் கிழக்கு தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களின் பூர்வீக நில இருப்பு என்பது வரலாற்றியல் உண்மை. ஆனால் தமிழர்கள் ஆகட்டும் அல்லது தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகட்டும் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் ஆகட்டும் முஸ்லீம் இஸ்லாமிய சமூக இருப்பை அங்கு நிராகரிக்கவில்லை. சிங்கள தேசிய இனம் அங்கு வாழ்வதை நிராகரிக்கவில்லை. அவர்கள் எதிர்த்ததெல்லாம் பேரினவாத திணிப்பையும் சிங்களவர்களின் பேரினவாத விரிவாக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மட்டுமே..!

இலங்கையில் திட்டமிட்ட சிங்களப் பேரினவாத கொள்கைத் திணிப்பையும் பேரினவாத அடக்குமுறைகளையும் தமிழர்களின் நிலப்பரப்பில் மேற்கொள்வதையே தமிழர்கள் எதிர்த்தார்கள்.. இன்றும் எதிர்க்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்துக்கு துணை போகும் தமிழர்களையே தமிழ் தேசியத் துரோகிகள் என்று அழைக்கின்றனர். அதுமட்டுமன்றி ஜிகாத்.. போன்ற கடும்போக்கு முஸ்லீம் இஸ்லாமிய மத அடிப்படை வாதங்கள் விரிவாக்கம் பெறுவதையே தமிழர்கள் எதிர்க்கிறார்கள். தமிழர்கள் இவற்றை எதிர்க்கிறார்கள் என்பதற்காக தமிழ் தேசியம் பேரினவாதமாகாது.

அந்த வகையில்.. இந்த மரை கழன்ற அரசியல் விற்பன்னர்கள் தமிழ் தேசியத்தை பேரினவாதமாக சித்தரிப்பது போன்று உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இன இருப்பையும் பேரினவாதமாக காண்பிப்பின்.. உலகில் தேசிய இனத்துக்கான வாதங்களும்.. வரைமுறைகளும் இருக்கவே முடியாது.

எனவே மரை கழன்ற.. இந்த அரசியல் விற்பன்னர்கள் இணைய உலகில் அரசியல் உளறல் கட்டுரைகளோடு உலா வர நினைக்க முதல்.. நவீன உலக ஒழுங்கில் தேசியம்.. தேசிய இனம்.. பேரினவாதம்.. பேரினம் என்ற பதங்களுக்கான சரியான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டு ஆக்கங்களை படைப்பது நன்று.

இவர்களின் அரைகுறைத்தனமான விவாதங்களால் கட்டுரைகளால் இத்தனை தமிழ் மக்களின் இழப்புக்களின் மத்தியில் கட்டி எழுப்பப்பட்ட தமிழ் தேசிய வாதமும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான தகவும் சிதறிக்கப்பட இனமானமுள்ள தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:05 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க