Sunday, September 13, 2009

சற்றிங் சாலையில்....



சற்றிங் சாலையில்....

காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி

" டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்" என்றான்.

அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன்.

"இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்" என்றான் துசி பதிலுக்கு.

சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை அடிப்பது) போடுவதும் "காட்ஸ்" விளையாடுவதும் என்று தன் பல்கலைக்கழகப் பொழுதை செலவு செய்ய ஆரம்பித்தான். அவன் தன் நண்பர்களைக் காணும் போதெல்லாம் தான் பழகும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் அவர்களின் குணம், இயல்புகள், நடத்தைகள் என்று பலவாறு விபரிப்பான். அவர்களும் கேட்டு ரசித்து சிரிப்பார்கள். இது அவனோடு பழகும் பெண்களுக்கும் தெரியும். இருந்தும் அவர்களும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மிக மட்டமாகக் கூடக் கதைப்பான்.அதைக் கூட அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. அதையே வேறு யாரும் செய்துவிட்டால் காவாலி, பொறுக்கி என்று திட்டுவார்கள், கோவிப்பார்கள். ஒருவேளை அவர்களும் அவனிடம் அதை விரும்பினமோ என்னவோ, சங்கர் அவர்களுக்கு மிக நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஒரு நாள் சங்கர் துசியிடம்.. டேய் இவள் மதி பற்றி என்ன நினைக்கிறா என்றான்.

" டேய் உனக்கே இது தகுமா.. எனக்குத்தான் பெரிசா அவையளோட பழக்கமில்லையே. பார்க்க அமைதியான நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. பழகிப் பார்த்தாத்தான் புரியும். நமக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன் கேட்கிறாய் ஏதும் பிரச்சனையோ ??" என்று பதில் கேள்வியோடு முடித்தான் துசி.

ம்.. சின்னப்பிரச்சனை அவளை இங்க ஒரு பொடியன் விரும்புறான். இவளும் அவனோட நல்ல மாதிரித் தான். இப்ப சமீபத்தில அவைக்க புதிசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. அதுதான் போன் பண்ணி என்னை அன்று வரச் சொன்னாள்.

" ஓஓ அப்படியே.. அவைக்கு இப்படியான பிரச்சனைக்கும் நீங்களே "அட்வைஸ்" கொடுக்கிறனீங்கள். நல்ல தொழில்தான் செய்யுங்கோ " என்று நக்கலாகப் பதில் கொடுத்தான் துசி.

அதற்கு சங்கர்.. டேய் துசி உனக்கு பெண்களைப் பிடிக்காது. அதால அலட்சியமாப் பேசுறா.. அதுகளுக்கு எத்தினை பிரச்சனைகள் தெரியுமே சமூகத்தில.

அதற்கும் துசி.." அப்படியே, தேவையில்லாம கண்டவையோடும் பழகிறது.. பழகிட்டு பழகினவையில, சமூகத்தில குறை சொல்லுங்கோ. சரி ஏதோ பிரச்சனை எண்டா... அப்படி என்னதான் பிரச்சனை சொல்லன்." என்று கூறி முடித்தான்.

அதற்கு சங்கர்.. இல்லையடாப்பா.. மதி கொஞ்சம் "மொடேன்". தெரியும் தானே. அவள் இன்ரநெற் சற்றிங் அது இதென்று ஜாலியான பெண். இவன் கபிலன் இருக்கிறான் எல்லோ அவன் தான் இப்ப அவளோட நெருக்கம்.

இதனைக் கேட்ட துசி சங்கரை இடைமறித்து.. " அட இவன் கபிலனே.. அடப்பாவி அவனும் தொடங்கிட்டானே " என்று சொல்ல..

அதற்கு சங்கர்.. பின்ன எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரோடாப்பா என்ற.. உடனே துசி குறுக்கிட்டு" சங்கர் சும்மா கடிக்காம விசயத்தைச் சொல்லு எனக்கு வகுப்பு இருக்கு" என்றான்.

சரி சொல்லுறன் கேள்.. என்று சங்கர் மீதி விடயத்தை சொல்லத் தொடங்கினான். இவள் மதி சற்றிங் என்று போறவள். அங்க பலரோடும் அவள் வஞ்சகமில்லாம கதைப்பாள்.

உடனே மீண்டும் துசி குறுக்கிட்டு " அதுசரி அவள் வஞ்சகம் இல்லாமல் தான் கதைக்கிறாள் என்றது எப்படி உனக்கு தெரியும். ஏதாவது கருவி வைச்சிருக்கிறியா கண்டுபிடிக்க"

அதுக்கு சங்கர்.. எல்லாம் பழகிப் பார்த்து வந்த ஒரு நம்பிக்கையிலதான். நான் சீரியஸாக் கதைச்சிட்டு இருக்கிறன் நீ நக்கலடிச்சுக் கொண்டே இருக்கிறா.

" இல்லையடாப்பா நீங்களா தான் எல்லாம் சொல்லுறிங்கள் வஞ்சம், சூதுவாது, நல்லவன், கெட்டவன் என்று அதுதான் எப்படி அறியுறிங்கள் என்று கேட்டன்".

சரி அதைவிட்டிட்டு விசயத்தைக் கேளன்.

அதற்கு துசி "ம் சொல்லு கேட்பம்" என்றான்.

அவள் சற்றிங் போற "இன்ரநெட் சற் கிளப்புக்கு" ஒரு நாள் எதேச்சையா கபிலனும் போயிருக்கிறான். அங்க ஒரே கூத்தும் கும்மாளமுமாம். ஆண்களும் பெண்களும் விடிய விடிய ஏதோ கதைக்கினமாம்.

துசி மீண்டும் குறுக்கிட்டு " என்னடாப்பா சங்கர்.. விடிய விடிய அப்படி என்னதான் கதைக்கினம். உலக அரசியலோ.. இல்ல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றியோ.. இல்ல கதாப்பிரசங்கமோ வைக்கினம்" என்ற..

சங்கர் பதிலுக்கு.. பாத்தியே மீண்டும் நக்கல் உனக்கு. அதுகள் சின்னஞ்சிறுசுகள் பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றான்.

அதைக் கேட்டுவிட்டு துசி.. " ஏண்டா.. சின்னஞ்சிறுசுகள் என்றா.. பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றா, அப்ப அங்க வில்லங்கம் இருக்குது போல. சமீபத்தில கேள்விப்பட்டன் சற்றிங்கில ஒரு பெண் தன்னை நடிகை அசின் என்று சொல்லி ஒருத்தனை ஏமாத்தினதா. அப்படி ஏதும் ஏடாகூடமா நடந்திட்டோ".

ம்.. நீ விசயத்துக்கு கிட்ட வந்திட்டா துசி.. மீதிக் கதையை கேளன்.. கபிலன் சற்றிங் போன இடத்துக்கு மதியும் வழமை போல போயிருக்கிறாள். கபிலன் வேற பெயரில போனவனாம். மதியும் வேற பெயரில தானாம் இருந்தவள். இரண்டு பேரும் நல்லா கதைச்சிருக்கினம். கபிலன் படம் காட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். பெயர் விபரம் ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டிருக்கிறான். மதியும் எல்லாம் கொடுத்திருக்கிறாள். படமும் காட்டி இருக்கிறாள். உடன கபிலன் திகைச்சுப் போய் மதி நீயா என்று கேட்டு தான் கபிலன் என்று சொல்லி இருக்கிறான். சுமார் 4 - 5 மணி நேரம் சற்றிங்காம், அதிகாலை வரை. தான் சற் பண்ணினது கபிலன் என்று அறிஞ்ச உடன மதி சற்றிங்க "கட்" பண்ணியிருக்கிறாள். இப்ப அதுதான் அவைக்க பிரச்சனையாப் போச்சடாப்பா.

பாத்தியோ சங்கர், இணையம் என்றது பனிப்போர் காலத்தில அமெரிக்க இராணுவ தகவல் பரிமாற்றத்துக்கு என்றிருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதை தகவல் பரிமாற்றத்துக்கு என்று உலக வலைப் பின்னலாக வர்த்தக நோக்கத்துக்குப் பயன்படுத்த தொடங்கியதும் பல நன்மைகளோட தீமைகளும் வந்திருக்கு. அதிலும் இந்த சற்றிங் பல மணித்தியாலங்களை வீணே விழுங்கிறதோட சின்னஞ்சிறுசுகளில இருந்து தாத்தாக்கள் வரை நல்ல விசயங்களை பகர மட்டுமன்றி பெருமளவில வேண்டாத அலட்டல்களிலும் ஈடுபடவும் தூண்டுது. குறிப்பாக இளம் பெண்களும், ஆண்களும் இப்ப சற்றிங்கிலதான் அதிக நேரம் செலவிடினம். அதிகம் அறியாதவையோட வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பேசிக் கொள்ளினம். அவை என்ன பேசினாலும் வெளி உலகுக்கு தெரியாது என்பதால எதுவும் அங்க பேசப்படலாம். அவை அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவல்லனவாகக் கூட இருக்கலாம். அதால பல தீமைகளும் நடந்தேற வாய்ப்பிருக்கு... என்று சங்கருக்கு விரிவாக பதிலளித்துக் கொண்டிருந்த துசி.. சங்கர் தனது கருத்தைக் கூர்ந்து கேட்பதை கவனித்துவிட்டு.. மீண்டும் தொடர்ந்தான்..

இது இப்படியே கட்டுப்பாடில்லாமல் கவனிப்பாரற்று தொடர்ந்தால் பெரிய சமூகத் தாக்கம் ஒன்றை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவைக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நாங்கள் இந்தச் "சுதந்திர சற்றிங்" கருத்துப் பரிமாற்றம் பற்றி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பா சிறுவர், சிறுமியர், இளம் ஆண்கள், பெண்கள் தொடர்பில் இந்த சற்றிங்கில யாரோட என்ன கருத்தப் பரிமாற்றம் செய்யினம் என்றதிலை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இல்லாட்டி கபிலன் - மதிக் கிடையில் தோன்றியது போல சின்னச்சின்ன பிரச்சனைகளில இருந்து பெரிய குழப்பங்கள் வரை குடும்பத்தில சமூகத்தில நாட்டில வர வாய்ப்பிருக்கு.

துசி சொன்னவற்றை கவனமாக செவிமடுத்து விட்டு.. சங்கர்.. சொன்னான்..

ம்ம்... நீ சொல்லுறது சரி தாண்டா துசி. எப்படித்தான் இதைக் கட்டுப்படுத்த வெளிக்கிட்டாலும் அரட்டைக்கு பழகினவையை கட்டுப்படுத்திறது கொஞ்சம் கஸ்டம் தான்.

துசி குறுக்கிட்டு.. " என்ன சங்கர் அனுபவம் பேசுதோ" என்றான்.

அதற்கு சங்கர்.. இல்லையடா துசி.. இது விடயத்தில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர, தாங்கள் சுதந்திரமா கதைக்கிறதை தடுக்கினம், தங்கள் நோக்கங்களைச் சந்தேகிக்கினம் என்று வேற வடிவத்தில பிரச்சனை திசை மாறிட வாய்ப்பிருக்கு எல்லோ. எனவே எல்லோரும் அவையா நிலைமைகளைப் புரிந்துணர்ந்து தேவையற்ற சற்றிங்கில ஈடுபடுறதைத் தவிர்த்தா இப்படியான அநாவசிய முரண்பாடுகளை, தனி நபர், குடும்ப, சமூகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன் பின் அறியாத கண்டவையோடும் தனிப்பட்ட முறையில் வீணே கண்டதையும் கதைச்சு, தனிப்பட்ட தகவல்களை பரிமாறப் போய் ஏன் வில்லங்கத்தை வலிய விலைக்கு வாங்க வேணும் சொல்லு பாப்பம்.

" உண்மைதான் சங்கர் நீயே சொல்லிட்டாய், இதில நான் என்ன சொல்ல இருக்கு. சம்பந்தப்பட்டவை கேட்டு அவதானமா நடந்து கொண்டாச் சரி. இப்ப எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு போயிட்டு வாறன்." என்று கூறி துசி விடைபெற முயல..

சங்கரும்.. எனக்கும் வகுப்பிருக்கடாப்பா.. கதையில மறந்திட்டன்.. என்று சொல்ல.. நண்பர்கள் இருவரும் "சி யு லேற்றர்.. பாய் டா நவ்.. என்று கூறி விடைபெற்றுக்கொண்டனர்..!

ஆக்கம் தேசப்பிரியன்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:00 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க