Tuesday, January 05, 2010

சாட்சியமற்ற களத்தை வைத்து கதை வரையும் சட்டாம்பிகள்..!



முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..!

வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50 ஆயிரம் சிங்களப் படைகளை எதிர்கொண்டு ஒரு காட்டுப் பிரதேசத்தை தக்க வைத்து தங்களை போராட்டத்தை காப்பாற்றத் தெரியாமலா இருந்திருக்கும்..???!

அதுமட்டுமன்றி 2006 இல் மூதூர் வரை சென்றும்.. அதன் பின்னர் மண்டைதீவு, மண்கும்பான் வரையும் போய் திடீர் என திரும்பி வந்தனர் புலிகள். திரும்பி வரும்போது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு போகும் போது இருக்கவில்லை. ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்..???!

அது இருக்க.. பெருமளவு ஆயுதங்களும் தளபாடங்களும் போராளிகளும் கையில் இருந்தும்.. ஏன் புலிகள் பின்வாங்குதலை செய்து கொண்டிருந்தனர்..??! ஒரு காடு சார்ந்த பிரதேசத்தை தானும் அல்லது பிரதேசங்களை தக்க வைத்துக் கொண்டு போராட அல்லது தம்மை பாதுகாக்க முயலவில்லை..???!

வளங்களை பாதுகாக்க என்று, பூநகரியில் இருந்து சிறீலங்கா இராணுவம் பரந்தன் நோக்கி புறப்பட்டதும் உடனடியாக படையணிகளை பின்வாங்கிக் கொண்ட புலிகள்.. அதுவும் வட போர்முனையில் அதுகாள் வரை எதிரியை நகரவிடாது தடுத்த உறுதிமிக்க பலமான படையணிகளை நகர்த்திய புலிகள் ஏன் அந்தப் படையணிகளைக் கொண்டு இன்னும் இன்னும் இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தி.. தமக்கான சாத்தியமான பிரதேசத்துக்குள் நுழைய முயலவில்லை..?!

நடேசன் அண்ணா கிளிநொச்சி விழுந்த கையோடு பிபிசிக்கு சொன்னது "எங்களால் இதனைப் போல பல நகரங்களை உருவாக்கிச் செயற்பட முடியும்.. நாம் ஒரு போதும் சரணடையமாட்டோம்" என்று. அதுமட்டுமன்றி இன்னொன்றையும் சொன்னார் "புலிகளின் காலத்துக்குப் பின்னாலான அரசியல் என்ற ஒன்று உருவாக வாய்ப்பில்லை" என்றார். அந்தளவுக்கு தமது இயக்கத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்தவர்கள்... எதற்காக அந்தக் கடற்கரை வெளிக்குள் தம்மை அடக்கிக் கொண்டார்கள்.. ஏன் எதற்காக..????!

இறுதிக்கட்ட ஈழப்போர் முழுவதுமே புலிகளின் செயற்பாடுகள் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு வகைக்குள் இருந்ததற்குக் காரணம் என்ன..??! மடுவை படைகள் கைப்பற்றிய போது இளந்திரையன் சொன்னார் "நாம் மடுவில் இருந்து விலகிக் கொண்டதன் பின்னணியில் தான் அது கைப்பற்றப்பட்டதாக. எம்மால் மடுவில் இருந்து விலக முடிந்தது போல் மதவாச்சி வரை நகரவும் முடியும்" என்று. அத்துணை பலமிக்க நம்பிக்கைகளை புலிகள் எப்போதும் வெளிப்படையாக பிற சந்தர்ப்பங்களில் மக்களுக்குச் சொன்னதில்லை.

1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஆயுதக்கையளிப்பு என்று வந்த போதே புலிகள் இந்தியாவை நம்பவில்லை. அதன் பின்னர் கூட தலைவரை பணிய வைக்க இந்தியா எடுத்த நகர்வுகள் புலிகளுக்கு புலப்படாத விடயமும் அன்று. 1991 ராஜீவ் துன்பியல் என்பதும் அதன் பின்னால் இருக்கப் போகும் விளைவுகளும் புலிகளால் ஆராயப்படாததும் அல்ல..!

இவற்றை எல்லாம் கடந்து புலிகள் அதிகம் அச்சம் கொண்டது செப் 11 2001 இற்குப் பின்னர் தான். அதன் பின்னர் தான் புலிகள் ஆயுதப்போராட்டத்தின் மீதான நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைதிப் பேச்சு மூலம் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். அதற்குக்காரணம்.. அமெரிக்காவினது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அறிவிப்பிலான.. அமெரிக்க நகர்வுகள் தெற்காசியாவில் மையம் கொண்டது தான். பல சீண்டல்கள் மத்தியிலும் புலிகள் போரை விரும்பாது இருந்ததும்.. இதன் காரணமாகத்தான்.

ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை சிங்கள அரசு முறிக்கப் போகிறது என்று அறிந்து முன் கூட்டியே போரை ஆரம்பித்தவர்கள் புலிகள். பிரேமதாச அரசு திட்டமிட்டு புலிகளுள் ஊடுவி காய் நகர்த்தி அவர்களை அழிக்க முற்பட்ட போதும் தந்திரமாக அதில் இருந்து வெளிவந்து அவரின் திட்டத்தை முறியடித்தவர்கள் புலிகள்.

இத்துணை அனுபவம் மிக்க ஓர் இயக்கம்.. எதற்காக முள்ளிவாய்க்கால்லுக்குள் முடங்கியது..??!

சாட்சியமற்ற களத்தில் யாரையும் குற்றவாளி ஆக்குவது சிரமமில்ல..! ஆனால் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்புக் கவசமாக விளங்கிய புலிகளை முடக்கியவர்கள்.. எவ்வாறு முடக்கினார்கள்.. என்பதை நாம் தகுந்த ஆதாரத்தோடு ஆராயாமல் விட்டு வைப்பதும் தமிழ் மக்களின் இனத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கு நலனிற்கு நன்மை அன்று..!

சாட்சியமற்ற களத்தை வைத்து புனை கதைகளை வரையும் சட்டாம்பிகள்.. நிலையை மாற்றி ஆதாரங்களோடு உண்மையை ஆராய்வது அவசியம். எதனால்.. எப்படி.. புலிகளுக்கு இந்த நிலை வந்தது..???! இதனை ஆராயாமல் இருப்பது தான் புனை கதைகளின் புத்துயிர்ப்புக்கும் ஒரு காரணம். இவை மக்களை பெருதும் விசனப்படுத்தவும் செய்கின்றன.போராட்டம் பற்றிய அவநம்பிக்கைகளையும் போராட்ட ஆதரவாளர்கள் பற்றிய சந்தேகங்களையும் கூட்டி வருகின்றன. சந்தேகங்களை திட்டமிட்டு பரப்பி.. போராட்ட ஆதரவுச் சக்திகளை சிதறடிக்கும் திட்டங்களும் இதில் அடங்கி இருக்கலாம்.

எனவே சாட்சியமற்ற களத்தைப் பற்றி வரும் கதைகள் கட்டுரைகள் தொடர்பில் அதீத விளிப்போடும் அவதானத்தோடும் இருப்பதோடு.. உண்மைகளை கண்டறியும் தேடலையும் செய்ய வேண்டும். அதனை தமிழீழத்தை போராளிகளை போராட்டத்தை நேசிப்பவர்கள் செய்ய வேண்டும்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:16 AM

1 மறுமொழி:

Blogger எல்லாளன் செப்பியவை...

காலத்தின் கட்டாயத்தையும் யதார்த்தத்தையும் எழுதியுள்ளீர்கள்

ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்று விட்டுவிட்டார்கள் போலும்

ஒருவர் இப்படிச் சொல்லிக்கொண்டு நக்கிரனில் வயிறு வளர்க்க எழுதி வருகின்றார். இப்படியானவர்களின் சுயரூபங்கள், சேறடிப்புக்கள், தெரிந்தும் எம்மவர்கள் காவிவருவதும் இன்னும் அவற்றை நம்புவதும் தான் வெட்கக் கேடாக இருக்கின்றது

உண்மையில் இவற்றை ஆராய்வதற்கு உண்மையான ஈழமக்கள் உணர்வுள்ளவர்கள், தகுதியுள்ளவர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்

எரிந்த வீட்டில் புடுங்கினது இலாபம் என்றவர்களின் பட்டியல்கள் தான் நீண்டுகொண்டே போகின்றது

இவற்றை ஆய்வு செய்யக்கூடிய தகுதியும் புலிகளுக்குத் தான் இருக்கின்றது புலி வேசம் போடுபவர்களுக்கு அல்ல

Tue Jan 05, 05:17:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க