அடுத்தவர் வாழ....தன்னையே தான் அழித்த குடும்பம்.
கலோ கலோ... ஒன்றும் சரியாக் கேக்கல்ல.. பெலத்தாக் கதை பிள்ள...
அம்மா.. நான் சுசி. லண்டனில இருந்து கதைக்கிறன்...
சுசியே.. சொல்லு பிள்ள..
எப்படி அம்மா இருக்கிறீங்கள். எப்பவாம் விசாத் தருவாங்கள். எப்ப ரிக்கட் போடப் போறீங்கள்..
இண்டைக்குப் பின்னேரம் தான் பதில் சொல்லுவாங்கள் பிள்ள. விசா கிடைச்ச உடன ரிக்கட் போடுவன். நீ ஒன்றுக்கும் யோசியாத. பிள்ளப் பிறப்புக்கிடையில அங்க நிப்பன். இப்ப தான் உங்க கதிரேசன் கோயிலுக்கு போய் உன்ர பெயரில.. கனடா பவாட பெயரில.. அவுஸி.. தீபாட பெயரில.. நியூசி சங்கர் பெயரில.. பிரான்ஸ் கோபி பெயரில.. நோர்வே துசி பெயரில அர்ச்சனை செய்திட்டு வந்திருக்கிறன்.
அப்படியே அம்மா. நல்லது. இந்த முறை நீங்க வந்தால்.. இங்கையே லண்டனில நிரந்தரமா நிற்பாட்டிறது என்றிருக்கிறம். அவர் சொன்னவர். அவாக்கும் வயது போகுது.. எனிப் போய் போய் வரேலாது.. ஒரேயடியா இங்க நிற்பாட்டி வையும் என்று. எதுக்கும்.. இஞ்ச வரும் வரைக்கும்.. கவனமா இருங்கோ அம்மா. பழைய படி.. வெள்ளை வான் எல்லாம் ஓடித் திரியுதாம் கொழும்பில..!
அப்படி ஒன்றும் இல்லப் பிள்ள. அங்கின இங்கின ஒன்றிரண்டு நடக்குது. மற்றும்படி இஞ்ச ஒரு பிரச்சனையும் இல்ல. நான் இன்னும் இரண்டு கிழமைல வந்திடுவன் பிள்ள. நீ யோசிக்காத.
அப்புறம் அம்மா.. சனல் 4 வீடியோ பாத்தனீங்களே... ஊர்ப்புதினம் காட்டினவங்களாம்.
என்ன பிள்ள... சரியாக கேக்கல்ல..
சனல் 4 வீடியோ பார்த்தனீங்களே..??!
(குரலை அடக்கி..) உனக்கென்ன விசரே பிள்ள.. இங்க சிங்களவங்கள் கொதிச்சுப் போய் இருக்கிறாங்கள். உதுகள் பார்க்க ஏலுமே. பேசாமல் கிட. உந்தச் சண்டைகளுக்க உங்கள.. 6 பேரையும் ஊரில இருந்து வெளில எடுத்து.. நானும் கொப்பரும் ஒவ்வொரு நாடு நாடா அனுப்பி வைக்கப்பட்ட பாடு. நீங்கள் அங்க போய் இருந்து கொண்டு.. சனல் 4 அதுஇதென்று கொண்டு நில்லுங்கோ..! பேசாமல் கிட. வயிற்றில உள்ள பிள்ளைக்கு கூடாது.. உதுகளைப் பார்த்து அதிர்ச்சி அடையாத.
நான் எங்கையம்மா... பார்த்தன். நான் நேற்றும் சினிமா படம் பார்த்திட்டுத்தான் படுத்தன். இல்ல இங்க சனங்கள் கதைக்குதுகள் அதுதான். அங்க யாரேனும்.. இன்ரநெட் வழிய பாத்தினமோ என்று கேட்டன் அம்மா.
சரி.. உதுகள விட்டுத் தொல.. பிரபாகரன்ர முழுக் குடும்பமும் செத்திட்டுதாம்.. எண்டு எங்களுக்கு இங்க கொழும்பில இருக்க வீடு தந்த பண்டா மாத்தையா சொல்லிச்சுது. அவன்.. கதைவிட்டு கதை புடுங்கிற ஆள் தானே. நான் கேட்டும் கேட்காததும் போல போயிட்டன். எங்களுக்கு என்னத்திற்கு உந்த ஊர் உளவாரம்.
ஓமம்மா. நீங்க அவனோட சும்மா கதைச்சுப் போடாதேங்கோ. விசாவ எடுத்துக் கொண்டு இஞ்சால வரப் பாருங்கோ. உங்களுக்கும் 70 வயசாகப் போகுது.
ஓம் பிள்ள.. நேற்று முழுக்க ஒரே கால் உளைவும்.. நாரிப் பிடிப்பும். நான் படுற பாடு. சரி பிள்ள.. உனக்கு நிறைய போன் காசு வரப் போகுது. நான் விசா கிடைச்சதும் அடிக்கிறனே.. பத்திரமா உடம்பைப் பார்த்துக் கொள். வயித்தில.. பிள்ள உதையுதே..??!
ஓம் அம்மா. பிள்ள அடிக்கடி உருளுது.. உதையுது. சரி அம்மா நான் வைக்கப் போறன். நீங்கள்.. விசா எடுத்த உடன ரிங் பண்ணுங்கோ. பாய் அம்மா.
பாய் பிள்ள.
நெடுக்காலபோவான் - யாழில்
Labels: ஈழக்கதை, குட்டிக்கதை, சமூகம், சிறுகதை, புலம்பெயர் வாழ்வில் தமிழர்
2 மறுமொழி:
அருமையான சிறுகதை.
உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...
இன்றைய நடை முறை வாழ்வு இப்படித்தான்...............