Thursday, April 19, 2012

யாழில் புதிசா முளைக்கும் கொஸ்பிட்டல்களும்.. இங்கிலீசு டொக்டர்களும்.. எங்கட சனமும்..!

Posted Image
பிள்ள என்னால கால் மூட்டு வலியும்.. முதுகு வலியும் தாங்க முடியல்ல... உந்த லண்டன் குளிரிக்க.. வீட்டுக்கையே அடங்கிக் கிடக்கேலாது பிள்ள. அதுதான் வருத்தம் கூடுது போல. ஒரு ரிக்கெட்டப் போட்டு ஊருக்கு அனுப்பி விடன்... உனக்குப் புண்ணியமாப் போகும்..

பொறுங்கம்மா.. இப்ப தானே இங்க ஜிபி (GP) சொல்லி ஆஸ்பத்திரியில கொண்டு போய் காட்டி இருக்கிறீங்கள். அவங்களும்.. செக்கப்புக்கு டேட் தந்திருகிறாங்கள் தானே.. கொஞ்சம்.. பொறுங்கோவன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு ஊருக்குப் போய் அங்க தனிய நின்று என்ன செய்யப் போறியள்...

பிள்ள அவங்கள் 3 மாசம் கழிச்சு தான் அப்பொயிண்ட்மெண்ட் டேட் தந்திருக்கிறார்கள். முந்தியும் உதைத் தானே செய்தவங்கள். குளுசையும் தந்து.. பிசியோ (physio) விட்டையும் போகச் சொன்னாங்கள். பிறகு மூட்டு மூட்டா ஊசி குத்தி அக்குபஞ்சர் என்று என்னவோ செய்தாங்கள். வலி ஒன்றுக்கும் அசையிறதா தெரியல்ல. வர வர பிள்ள என்னால வலி தாங்க முடியல்ல. உனக்குத் தெரியாது ஒரு அடி எடுத்து வைக்க நான் படுறபாடு..!

சரியம்மா.. உங்கட விருப்படி.. ஊருக்கு அனுப்பிவிடுறன்.... அங்க போய் என்ன செய்யப் போறீங்கள்..

அங்க.. யாழ்ப்பாணம் போய் அவள் பரிமளம் வீட்ட நிற்பன். எங்கட யாழ்ப்பாண இங்கிலீஸ் டொக்டர்மார் நல்லவங்கள். கெதியா கவனிப்பாங்கள். இஞ்ச போல.. அப்பொயின்மெண்டுக்கு காத்துக் கொண்டு கிடக்கத் தேவையில்ல.. நீ என்னை அனுப்பிவிடு.. அவங்கள் கவனிப்பாங்கள்..

நல்லாத்தான் கவனிப்பாங்கள் போங்கோ..! குஞ்சாச்சிக்கு என்ன செய்தவங்கள் எண்டதை மறந்திட்டீங்கள் போல. அதுவும் இல்லாம... கனடாவில இருந்து ஊரில இருக்கிற மகளைப் பார்க்கப் போன மாமிக்கு யாழ்ப்பாணத்தில.. என்ன செய்திருக்கிறாங்கள் தெரியுமே..??! அவா இப்ப 2 மாதத்துக்கு முன்னால தான்.. காலுளைவு என்று போய் யாழ்ப்பாண கொஸ்பிற்றலில.. எக்ஸ்ரே எடுத்திருக்கிறா. அதைப் பார்த்திட்டு.. உனக்கு எலும்பு தேஞ்சு போச்சுது.. என்று சொல்லி.. ஒரு சிங்கள டொக்டர் வந்து பார்ப்பாராம் என்று சொல்லி விட்டிருக்கிறாங்கள். அவர் வந்து பார்த்திட்டு.. உது சரிவராது என்றிட்டு போயிட்டாராம். பிறகு சிங்கள டொக்டருக்கு பரிந்துரைத்த தமிழ் டொக்டர் .. தனக்குத் தெரிஞ்ச இன்னொரு பிரைவேட் ஆஸ்பத்திக்கு போகச் சொல்லி இருக்கிறார். அங்க போனா.. அவா ஒரு லேடி டொக்டராம். அவா பார்த்திட்டு உது நியுரோ (neuro) பிராப்பிளம் என்று மருந்து கொடுத்திருக்கிறா. அதைக் குடிச்சது தான்.. நடந்து திரிஞ்ச மாமிக்கு நடக்க முடியாமல் போயிட்டாம். உடன அவை அந்த லேடி டொக்டரட்டையே கொண்டோடி இருக்கினம்.. அவா உள்ள இருந்து கொண்டு சொன்னாவாம்.. இது இப்ப தான் திறந்த கொஸ்பிட்டல்..20.. 30 பேஷண்ட் வராமல் பார்க்க ஏலாது.. கொண்டு போய் பெரியாஸ்பத்திரியில காட்டுங்கோ என்று.

பிறகு...

பிறகு என்ன.. அவை மாமியை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போக.. பிறகும் அதே சிங்கள டொக்டர் தானாம் வந்து பார்த்திட்டு.. அந்த லேடி டொக்டர் கொடுத்த குளுசைகளையே குடி.. இரண்டு கிழமையால வந்து பார்க்கிறன்.. இப்ப வீட்ட போகலாம் என்றிட்டாராம். அவாக்கோ வருத்தம் குறையல்லையாம்.. பிறகு.. கைதடியில ஆயுள்வேத கொஸ்பிட்டலில போய் மருந்தெடுத்து எவ்வளவோ சுகமாம்..! கொஞ்ச நாளைக்கு முன்னம்.. மாமி யாழ்ப்பாணக் கொஸ்பிட்டலுக்கு போய் கனடாவில காட்ட மெடிக்கல் ரிப்போட் கேட்டிருக்கிறா.. அதுக்கு அவை கொடுக்கப் பஞ்சிப்பட்டுச்சினமாம். மாமி சொன்னாவாம்.. உங்களுக்கு முடியல்லை என்றால் ஏன் வீட்ட கலைக்கிறீங்கள்.. சனங்களுக்கு ஆயுள்வேதம்.. சித்தா.. யுனானி.. என்று உங்க உள்ள மற்ற வைத்திய முறைகளையும் பரிந்துரைக்கலாம் தானே என்று. அதுக்கு அந்த தமிழ் டொக்டர் சீறி.. விழுந்திட்டு சொன்னாராம்.. இது இங்கிலீஸ் கொஸ்பிட்டல்.. எங்களுக்கு அதுதான் தெரியுமென்று. மாமி பிரச்சனைப்படாமல்.. மெல்ல எழும்பி வந்திட்டாவாம்.

இஞ்ச.. லண்டனில இங்கிலீஸ் கொஸ்பிட்டல்களில.. அக்குபஞ்சர்.. யுனானி அதுஇதென்று இங்கிலிஸ் வைத்தியத்தோட செய்யுறாங்கள்.. அவைக்கு செய்ய.. சொல்ல.. என்னவாம். உவங்கள் எங்கட டொக்டர்மாருக்கு தலைக்கனம்.. இத்தனை யுத்தம்.. நாட்டில நடந்தும்.. உவங்கள் திருந்தல்ல... என்றால் பாரன்..பிள்ள...!

இப்ப கொஞ்சம் முன்னம் தானேம்மா சொன்னீங்கள் அவங்கள் நல்லம் என்று.. இப்ப இப்படிச் சொல்லுறீங்கள்..

அது பிள்ள............... அப்ப நானும் கைதடியில கொண்டு போய் காட்டட்டே பிள்ள.. எனக்கு ஒரு ரிக்கெட்டப் போடன்..........

அம்மா........... உங்களைச் சொல்லித் திருத்த ஏலாது. ஏதோ செய்யுங்கோ.. ரிக்கெட்ட போட்டு.. வீல் செயாரும் புக் பண்ணி விடுறன்..! என்னவாவது செய்யுங்கோ..!

சரி பிள்ள.. அப்படியே செய்.. பெரிய புண்ணியமாப் போகும்.

(இது அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவியது. லேடி டாக்டர் அண்மையில் யாழ்ப்பாணம்.. திருநெல்வேலிப் பகுதியில் அப்பலோ தரத்தில் சகல வசதிகளுடன்... (அப்படித்தான் வெளியில் சொல்லப்படுகிறது.. ஆனால் அங்க போனா.. இவ்வாண்டு இறுதியில் தானாம்.. எல்லா வசதியும் வரும் என்று சொல்லி அனுப்பினம்..).. திறக்கப்பட்ட வைத்தியசாலையில் இருக்கிறவாவாம். 20.. 30 நோயாளிகள் இல்லாமல் அவா நோயாளிகளைப் பார்க்கமாட்டாவாமே..! என்னே ஒரு வைத்திய சேவை.)

யாழில் நெடுக்காலபோவன்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:55 AM

2 மறுமொழி:

Blogger Muruganandan M.K. செப்பியவை...

நன்றாகச் சொல்லியிருக்கிறியள்.
டொக்டர் மாறி டொக்டர் என அலையும் எம்மவர்களின் அவசரத்தை எடுத்துக் காட்டும் அதே நேரம் நோயாளிகளின் துன்பத்தில் அக்கறை காட்டாத மருத்துவர்களையும் சுட்டியது சிறப்பாக உள்ளது.

Fri Apr 20, 07:45:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

தங்களின் மேன்மை பொருந்திய கருத்துக்கு நன்றி டாக்டர்.

Fri Apr 20, 08:55:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க