Saturday, July 05, 2014

4 ஏ காய்..!

ஏ எல் பரீட்சை முடிந்த சந்தோசத்தில்.. இடுப்பில் சுத்திய பட்டு வேட்டியும்.. தோளைச் சுற்றிய பட்டுச் சால்வையுமாக.. நல்லூர் முருக தரிசனம் காண.. ச்சா.. அதுக்கெல்லாமா அங்க போவாங்க.. வண்ண வண்ண காவ் சாறி உடுத்து வரும் இளம் தேவிகள் தரிசனம் காணும் பக்திப் பரவசத்தோடு.. நித்தியன் மயூரனின் வீட்டு வாசலில்.. சைக்கிளில் வந்து பெல்லை அடுத்துக் கொண்டு நின்றான்.

ஆனால்.. மயூரனோ வருவதாக இல்லை. டேய் மயூரன்.. கெதியா வாடா. ரைம் போகுது. நித்தியா போகப் போறாடா.. என்று கத்தினான். நித்தியாவின் பெயரைக் கேட்டதுமே மயூரன்.. எப்படி வாசலுக்கு வந்தான் என்று தெரியவில்லை ராக்கெட் வேகத்தில் வந்து நின்றான்.

ஏ எல் பரீட்சைக் காலத்தில் தான்.. நல்லூர் முருகன் திருவிழாவும் வருவதால்.. எப்படா பரீட்சை முடியும்.. எப்படா.. அங்கு வரும் பெட்டையளை சைட் அடிக்க போவம் என்று அலையும் இளைஞர்கள் கூட்டத்தில்.. மயூரனும்.. நித்தியனும்.. இருந்தது ஒன்றும் வியப்பில்லை. அது அங்கு சகஜம். இளம் பெண்களும் இதே நோக்கத்தோடு அங்கு கூடுவதும்.. புதிதல்ல.

மச்சான் எப்படிப் போச்சு.. கடைசி எக்ஸாம்.. என்று சைக்கிளில் முன் பாரில் உட்கார்ந்திருந்த மயூரனைக் கேட்டான்.. நித்தியன். நல்லா போச்சுடா. 60 க்கு 56 எம் சி கியூ வருது. நேற்றுப் பின்னேரமே ரியூசனுக்குப் போய் நாகநாதன் சேரிட்ட.. மார்க்கிங் ஸ்கீம் எடுத்துக் கொண்டு வந்தன். உனக்கு எப்படி மச்சான்..??!

எனக்குப் பறுவாயில்லைடா. எனக்குத் தானே அண்ணர் கனடாவில இருக்கிறார். நான் பெரிய எதிர்பார்ப்போட எக்ஸாம் செய்யல்ல. வாறது வரட்டும்.. ரிசல்ட் வாறதுக்கிடையில நான் கனடாவில நிற்கிறனோவும் தெரியாது. ஆனால்.. உங்கட வீட்ட நீ ஒரே பிள்ளை மயூ. அதுவும் இல்லாமல்.. சின்னனில் இருந்து உங்கட அம்மா சொல்லிக் கொண்டு வாறா.. நீ டொக்டரா வருவா என்று. அந்த ஆசையை பூர்த்தி செய்யத்தானேடா வேணும் என்றான்.. நித்தியன் நிதானமாக..!

உண்மை தாண்டா.  எங்கட பெற்றோருக்கு எங்கள் மேல இருக்கிற எதிர்பார்ப்பு அதிகம். அதுவே சிலவேளை பிரஸரையும் கூட்டுது. சிலவேளை ஊக்கமாகவும் இருக்குது. பார்ப்பம்.. சோதனை செய்தாச்சு. எனி எல்லாம் மார்க் பண்ணுறவன் கையில். சரி அதை விடு.... நித்தியா என்னவாம் செய்தாளாமோ..??! என்ற கேள்வியோடு முடித்தான் மயூரன்.

அவளுக்கு என்னடா. அவள் 7டி சி காய். அதுவும் வேம்படி. செய்யாமல் இருப்பாளே. சோதனை முடிஞ்ச கையோட.. நம்ம விசயத்தை அவிழ்ப்பம் என்று பார்த்தால்.. ஆளைக் காணக் கிடைக்குதில்ல. அதுதான் இன்றைக்கு நல்லூருக்கு வருவாங்களாம்.. என்று அவள் பிரண்ட் நந்தினி சொன்னாள். அங்க கதைப்பமே என்றான்.. நிறைய எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்தவனாய் நித்தியன்.

அதுசரி.. அவளட்ட உன்ர விசயத்தைக் கதைக்க ஏண்டா என்னை கூட்டிக் கொண்டு போறாய்... அப்புறம்.. பிரச்சனையள் வராதோ என்றான்.. மயூரன்.

இல்லை மச்சான். நீயும்.. 7டி சி காய். அவளும் அது. அவளுக்குத் தெரியும்.. நீ நல்லா படிப்பாய் என்று. நானும் நீயும் நல்ல பிரண்ட்ஸ் என்றும் தெரியும். உன்ர மச்சாள் வேற. ஏதேனும் பிரச்சனை என்றால் சமாளிக்கலாமில்ல.. அதுதான்.

அடப்பாவி.. நல்லா பிளான் போட்டுத்தான் மூவ் பண்ணுறா. பண்ணு பண்ணு. ஏதோ நல்லதாய் முடிந்தால் சந்தோசம் என்றான் மயூரன் பதிலுக்கு.

அப்போது.. நல்லூரை நோக்கிய பயணத்தில்.. வீரமாகாளி அம்மன் வீதியை அடைந்திருந்த நண்பர்கள்.. மின்னல் வேகத்தில் 3 பஜிரோக்களும் ஒரு பிக்கப்பும் போகக் கண்டனர். அதில் பிக்கப்பில். கறுப்பு உடையணிந்த கரும்புலிகள் போயினர். அந்த வாகன அணி மயூரனின் எண்ணத்தைக் கவர.. என்ன மச்சான்.. பிளக் போகுது. ஏதேனும் நடக்கப் போகுதோ..??!

தெரியல்ல மச்சான். அதை விடு. அங்க பார் நித்தியாவும் பிரன்ட்சும் நடந்து போறாளவ... என்றான் மயூரனின் கவனத்தை திருப்பியவனாக.. நித்தியன்.

ஆமா என்ன. வா... இந்த சைக்கிள் பார்க்கில சைக்கிள விட்டிட்டு.. நாங்களும் நடந்து போவமே. பார்க் பண்ணேக்க.. முன்னால பார்த்து விடு..  ஏன்னா.. அப்புறம் சைக்கிள் எடுக்கிறது கஸ்டம் என்றான் மயூரன் சைக்கிளில் இருந்து குதித்தவனாய்.

ஒ கே. மச்சான். நான் சைக்கிளை பார்க் பண்ணிட்டு வாறன். நீ உதில நில்லு என்று விட்டு நித்தியன் பார்க்குக்குள் நுழைந்தான் சைக்கிளை உருட்டிக் கொண்டு.

*************

நண்பர்கள் இருவரும்.. நல்லூர் தெற்கு வீதியை அடைய.. நித்தியா குறூப்பும் அங்க நிற்க..

நித்தியன் அவர்களை அணுகினான். காய் நித்தியா.. எக்ஸாம் எப்படி.. என்றான்.

சிறிது மெளனத்தின் பின்.. பறுவாயில்லை. உங்களுக்கு எப்படி என்றாள்.. பதிலுக்கு அவள்.

செய்திருக்கிறன்.. பார்ப்பம்... என்றான் நித்தியன்.

மயூரன் என்ன சொல்லுறான்.. அவன் வெழுத்துக்கட்டி இருப்பான்.. என்றாள்.. அவள்.

செய்தது எண்டு தான் சொல்லுறான் நீங்களே கேளுங்களேன் என்றான் நித்தியன்.

அதற்கு அவள்.. அவன் செய்வான் எண்டது தெரிஞ்ச விசயம் தானே என்றாள் அவள்.

சிறிது நேர சம்பாசணைக்கு அப்புறம்.. நல்லூரின் முன் வீதி நோக்கி நடக்க ஆரம்பித்த நித்தியா குறூப்பை.. நித்தியனும்.. மயூரனும் பின் தொடர்ந்தார்கள்.

அங்கே.. இரண்டு கரும்புலிகள்..சீருடையில்.. வந்து சாமி கும்பிட்டுக் கொண்டு நின்றார்கள். மீண்டும் அவர்கள் மயூரனின் கவனத்தை ஈர்த்தார்கள்.

சாவுக்கு நாள் குறிச்சிட்டு வந்து எப்படி நிம்மதியா சாமி கும்பிடுறாங்க. அவங்களும் எங்களைப் போல இளம் ஆட்கள் தானே. எத்தனை ஆசைகள் மனசில இருக்கும்.. என்று எண்ணத்தை சிதற விட்டவன்..

என்ன மச்சான்.. மெளனமா வாறா என்று நித்தன் கேட்க.. சுதாகரித்துக் கொண்டு..ஒன்றுமில்லை.. இந்தக் கரும்புலிகளைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தன்.. என்று முடித்தான் மயூரன்.

அதைக் கேட்டு கொஞ்சம் ஆத்திரப்பட்டவனாய்.. ஒன்று செய் மயூ.. பேசாம நீயும் கரும்புலி ஆகிடடா. ஒரே கரும்புலிக் கதை தான் உனக்கு. சோதனை பாஸ் பண்ணினியா.. டொக்டரானியா.. லண்டன் அவுஸி.. இல்ல கனடான்னு போய் செற்றிலாகினியா என்றில்லாமல்.. கரும்புலி அதுஇதென்று கொண்டு. அது அவங்க பிரச்சனை. எங்களுக்கு என்னடா என்றான்.. நித்தியன்.. மயூரனின் கவனத்தை திருப்ப.

சரி.. அதுகளை விடு. இப்ப நித்தியாட்ட நீ எப்படி உன்ர விசயத்தைச் சொல்லப் போற என்று பதிலுக்கு மயூரனும் கதையை நித்தியனுக்கு விரும்பின பக்கம் திருப்பினான்.

இப்ப எதுவும் சொல்லுறதா இல்லைடா. ரிசல்ட் வரட்டும். அப்ப சொல்லுவம். அதுக்குள்ள கனடா போக வேண்டி வந்திட்டால் அதுக்குள்ள சொல்லிடுவன் என்றான் திடமாக.

*******************

மாதங்கள் 3 கழிய.. ரிசல்ட் நாளும் வந்தது.

நித்தியனின் அண்ணன் கனடாவுக்குள் வாறது பிரச்சனை இல்லை.. எதுக்கும் நல்ல ஏ எல் ரிசல்ட் ஓட வந்தால் இங்க வந்திட்டு படிக்கலாம் என்று சொன்னதில் இருந்து.. நித்தியனுக்கும் ரிசல்ட் மீது ஒரு எதிர்பார்ப்பு வந்திருந்தது. அது மட்டுமன்றி.. நித்தியாவுக்கு நிச்சயம்  நாலு ஏ வரும்... அவளுக்கு நிகரா இல்லாட்டிலும் நல்ல ஒரு கவர்ச்சியான பெறுபேறு இல்லாட்டி இவனின் ஆசைக்கு அவள் இசைவாளா என்ற கேள்வியும் நித்தியனின் மனதுக்குள் இருந்ததால்... ரிசல்ட் டேயும் அதுவுமா.. பெரிய எதிர்பார்ப்போடு.. இந்துக்கல்லூரி வாசலில் காத்திருந்தனர் நண்பர்களுடன்.. நித்தியனும் மயூரனும்.

அப்போது மகேஸ்வரன் மாஸ்டர் (மக்கர்) வந்து.. சொன்னார்.. பிள்ளையள்.. எல்லாரும்.. ஒண்டுக்கு நில்லுங்கோ..  இப்பதான் ரிசல்ட் வந்திருக்கு என்று.

அதைக் கேட்டு சிரித்த படி.. மயூரன் நித்தியனைப் பார்த்துச் சொன்னான்.. மக்கர் உந்த ஒண்டுக்கு நிற்கிறதை மட்டும் எப்பவும் விடமாட்டார் போல.. என்று.

அவ்வேளை.. மயூரனை கியூவில்.. கண்டுவிட்டு.. அவனை அணுகிய மக்கர்.. வாழ்த்துக்கள் மயூரன்.. உனக்கும் இன்னும் ஒருவருக்கும் பயோவில.. 4 ஏ வந்திருக்குது... என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

அதனைக் கேட்ட உற்சாகத்தில்.. என்ன டிஸ்ரிக் ராங்... ஐயர்லண்ட்  ராங் என்று அறியும் ஆவல் பொங்க கியூவில் நின்றான் மயூரன். மக்கர் சொன்னதை மயூரனுக்கு பின்னால் நின்ற நித்தியனும் கேட்டுவிட்டு.. மயூரனை வாழ்த்தினான்.

அப்புறமாக இருவரும்.. பெறுபேற்று அறையை அடைய.. மயூரனின் பரீட்சைப் பெறுபேறு சொல்லப்பட்ட மயூரன் மீண்டும் மகிழ்ச்சியில் திளைத்தான். நித்தியனின் பெறுபேறும் சொல்லப்பட்டது. அவன் இரு திறமைச் சித்தியும்... மிகுதி சாதாரண சித்திகளும் பெற்றிருந்தான். அதனால்.. சற்று சோகம் சேர வெளியில் வந்தவனை மயூரன் கூப்பிட்டு.. என்ன ரிசல்ட் டா என்றான்.

சும்மா விடு மச்சான். நான் தான் சொன்னனில்ல. நான் பெரிசா எதிர்பார்க்கல்ல என்று. மீண்டும் உனக்கு வாழ்த்துக்களடா. ஒரு டொக்டரா.. உன்னை இன்னும்  ஐஞ்சாறு வருசத்தில பார்ப்பன்.... என்றான் நித்தியன் மயூரனுடன் கைகுலுக்கிய படி.

*************************

இதற்கிடையே.. மயூரனுன்.. நித்தியனும்.. நித்தியாவின் பெறுபேற்றை அறிய வேம்படிப் பக்கமாக வேகமாக சைக்கிள்களை செலுத்தினர். அங்கும் பள்ளிக்கூட வாசலில்..பெரும் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் நித்தியா மகிழ்ச்சியில் திளைத்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளை அணுகிய மயூரன்.. என்னடி ரிசல்ட் உனக்கு என்று கேட்டான். 3 ஏ பி என்றாள் பதிலுக்கு அவள். உனக்கு 4 ஏ ஆம் என்று இங்க தகவல் வந்திட்டுது. நித்தியனுக்கு என்ன.. என்றாள் மேலும் விபரம் அறிய.

இந்தா நித்தியனே நிற்கிறான் கேள் என்றான் மயூரன். ஆனால் நித்தியன்.. அவளுக்கு முகக் கொடுக்க முடியாதவனாய்.. சற்றே தள்ளியே நின்று கொண்டிருந்தான். தன் ஆசைகளில் ஒன்று நிராசையான சோகத்தில் அவன்.. கனடாவே அடைக்கலம் என்ற நிலைக்கு வந்திருந்தான் அப்போது.

***************************

காலங்கள் ஓடின. நித்தியனும் கனடா போய் சேர்ந்திருந்தான். மயூரனும்.. கொழும்புக்குப் படிக்கப் போயிருந்தான்.

ஆனால்.. இடையில்...

கனடாவில் இருந்து.. கனடா பிரஜையாக... நாடு திரும்பினான் நித்தியன். அவனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்திருந்ததால்.. அவன் நித்தியாவை மனதில் வைத்து தாயகம் திரும்பி.. அவளை பெண் கேட்க முடிவு செய்திருந்தான்.

அவன் முடிவு செய்த படியே தாயகம் திரும்பி.... யாழ் பல்கலையில் படித்து.. யாழ் வைத்தியசாலையில்.. பயிற்சி வைத்தியராக இருந்த நித்தியாவை சந்தித்தான் நித்தியன்.

தனது விருப்பை நித்தியாவிடம் நாசூக்காக வெளியிட..

அவளோ.. தான் ஏலவே கூடப் படிக்கும் ஒருவரை விரும்பி உள்ள விபரத்தைச் சொல்ல.. அதிர்ந்து போனவன்.. சுதாகரித்துக் கொண்டு.. மயூரனைப் பற்றி விசாரித்தான்.

அப்போது.. முகம் கோணியவளாய்.. நித்தியா சொன்னாள்.. உனக்கு விசயம் தெரியாதா.. மயூரன்.. கொழும்புக்குப் படிக்கப் போனவன் எல்லோ. அடிக்கடி அவன்ர அம்மா அப்பாவை பார்க்க.. ஊருக்கு வந்து போறவன். அப்படி இருக்கேக்க.. ஓர் நாள்.. இங்க கடும் பிரச்சனையா இருந்தது. சிங்கள ஆமிக்காரன் ஆனையிறவுக்குள்ளால..முன்னேறி வர முயற்சிச்சவங்கள். அந்த நிலைமையை பார்த்திட்டு அவனுக்கு மனக் கஸ்டமாய் போட்டுது. அதுமட்டுமில்ல.. அப்ப கிளாலியால தான் போக்குவரத்து. அதிலும்.. சனங்களை நேவி சுடுறதும்.. போக்குவரத்தை நிற்பாட்டிறதும்... பொருட்களை தடை செய்யுறது என்றும் சரியான கஸ்டமா இருந்தது. உனக்குத் தெரியும் தானே அவன் கொஞ்சம் சென்சிற்றிவ். நாடு.. மக்கள்.. மொழி என்று பாசம் வேற. கொழும்பில சனம் மகிழ்ச்சியா இருக்க.. இங்க உள்ள சனத்தைப் போட்டு வேண்டும் என்றே கஸ்டப்படுத்திறாங்கள். தங்களுக்கு கீழ இல்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சிங்களவங்கள் இப்படிச் செய்யுறாங்கள் என்று.. பொருமிக் கொண்டு இருக்கிறவன். அவங்களுக்கு செய்யுறன் பார் என்று.. ஓர் நாள்.. கரும்புலியில சேர்ந்து.. இப்ப ஒரு வருசத்துக்கு முதல் தாக்குதல் ஒன்றில கரும்புலியா போய் வீரமரணம் அடைஞ்சிட்டான்.

இதைக் கேட்ட நித்தியன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தவனாய்.. மயூரனுடனான நட்புக்கால எண்ணங்கள் மனதை வந்தாள.. கண்களில் அரும்பிய கண்ணீரால் அவனை பூஜித்துக் கொண்டிருந்தான். நான் கனடா போய் எங்கட போராட்டத்திற்கு ஏதாவது செய்யனும் என்ற உள்ளுறுதியோடு.. நித்தியாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான்.. நித்தியன்.. நிரந்தரமாய்..!


(கரும்புலிகள் யாரோ என்றால்.. அவர்கள் மரணத்தை வென்றுள்ளோர்கள் மட்டுமல்ல.. எங்கள் உறவுகளும் கூட.)

(ஆக்கம் நெடுக்காலபோவன் - July 5th 2014)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:40 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க