Friday, July 04, 2008

அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்..

அம்மா நான் போயிட்டு வாறன்.. புன்னகை தந்து விடைபெற்றான் சங்கர்.

இப்ப தான் வந்தாய்.. அதுக்குள்ள எங்கையடா போறாய்.. தாயின் பதில் கேள்வி அவசர அவசரமா வெளி வர, கொஞ்சம் திக்குமுக்காடிப் போன சங்கர் சுதாகரித்தபடி..

ஒரு இடமும் இல்ல அம்மா.. உவன் சிவா வீட்டடிப் பக்கம் சைக்கிளில ஒரு நாலு மிதி மிதிச்சு வட்டமடிச்சிட்டு வரப் போறன்.

உந்த உச்சி வெய்யிலுக்க உலாத்தாமல் கெதியா வந்து சேர்.. பாசமிகு எச்சரிக்கையோடு அம்மா விடை தர சங்கரின் சைக்கிள் லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது ஊர்ப் புழுதியில் குளித்தபடி.

புறப்பட்ட சிறிது நேரத்தில் சைக்கிள் நேராக காயத்திரி வீட்டு வாசலில் போய் நின்றது.

காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சினேகாவை ஒத்த உருவம். சங்கரும் காயத்திரியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். காயத்திரி சாதாரண தரம் படிக்கும் போது சங்கரிடம் அடிக்கடி நெருங்கி வந்து பழகிய போதெல்லாம்.. அவளுடன் காதல் பூப்பதாய் உணர்ந்தவன்.. அவளுடன் கனவில் டூயட் பாடித் திரிந்தவன் தான் இந்தச் சங்கர்...

சங்கர் உனக்கு சங்கதி தெரியுமா எங்கட வாகையடி வீட்டு பரிமளம் அன்ரி இருக்கிறா எல்லோ

ஓம் சொல்லுங்கோ அவாக்கு என்னம்மா... அவவுக்கு ஒரு மகளும் இருக்கெல்லோம்மா..

ஓமடா அவாட அந்த மகள் காயத்திரி கலியாணம் கட்டிக் கனடாவுக்குப் போயிட்டுதாம். போன கிழமை தான் மாப்பிள்ளை கனடாவில இருந்து வந்து கட்டிக் கொண்டு போனவராம். கலியாணம் கொழும்பில பெரிசா நடந்ததாம்.

மாப்பிள்ளை கனடாவில இஞ்சினியராம். அவளும் பிள்ளை அதிகம் படிக்காட்டிலும் கிளி போல நல்ல அழகு தானே. அதுதான் ஆசைப்பட்டு கட்டிக் கொண்டு போனவையாம். பொடியன் குடும்பம் எல்லாம் கன காலமா கனடாவில தானாம். பெரிய வசதியாம். எங்கட பசுபதி மாமா தானாம் பேசிச் செய்து வைச்சவர்.

என்று அம்மாவும் மகனும் சமீபத்தில் உரையாடிய வார்த்தைகள் காயத்திரி வீட்டு வாசலிலும் மனதோடு மீள.. அன்றொரு நாள் அவளோடு கனவில் முணு முணுத்த காதல் கான வரிகள் சோக வரிகளாக எழுந்தன சங்கரின் மனதில்.

எடே சங்கர் அது அப்ப.. இப்ப நீ யார்.. மனச் சாட்சி அவனைக் கேள்வி கேட்க.. காயத்திரியின் நினைவில் இருந்து மீண்டவன்.. சிவா வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

அப்போ.. வாகனம் ஒன்று வேகமாய் வந்து அருகில் நின்றது.

சங்கர்.. உன்னை அண்ண உடன கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர் என்று வாகனத்தில் இருந்தவர் சொல்ல..

அப்படியா.. இதோ வாறன். சைக்கிள வாகனத்தில பின்னால போடுறன்.. அப்படியே வீட்ட போயிட்டு அம்மாட்டையும் சொல்லிட்டுப் போவம் என்ன.

ஓம் சங்கர். அப்படியே செய்வம்.

வாசலில் வாகனம் வந்து நிற்க.. சங்கரின் தாய்..

வாங்கோ பிள்ளையள் எப்படி இருக்கிறீங்கள்.

சுகமா இருக்கிறம் அம்மா. சங்கரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி அண்ண சொல்லி விட்டவர் அதுதான் வந்தனாங்கள்.

அப்படியா.. சங்கர் கவனமாப் போய் வாப்பு என்று அன்பு மகனை கட்டியணைத்து உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் முட்ட அனுப்பி வைத்தார் அம்மா.

சங்கர் போய் இரு தினங்களில்..

ஈழநாதம் விசேட பதிப்புக்காய் மக்கள் முண்டி அடிக்கிறார்கள்.

என்ன விசயமாம் தம்பி.. சனங்கள் வரிசை கட்டி நிக்குதுகள். சங்கரின் அம்மா பசுபதி மாமாவை வீதியில் கண்டு கேட்டார்.

நேற்றிரவு கடலில சண்டையாம். கடற் கரும்புலிகள் தாக்கி டோரா மூழ்கடிப்பாம்.

அப்படியே சங்கதி. எங்க பேப்பரில போட்டிருக்காமோ...

ஓமாம் அதுதான் சனங்கள் பேப்பருக்காக காத்திருக்குதுகள் நானும் அதுக்குத்தான் நிற்கிறன் என்று முடித்தார் பசுபதி மாமா.

அந்த நேரத்தில் பசுபதி மாமாவின் மகன் சுகின்.. பதறியடித்துக் கொண்டு பத்திரிகையும் கையுமாய் ஓடி வந்தான்..

அம்மா.. சங்கர் அண்ணா கரும்புலியா வீரமரணம் அடைஞ்சிட்டார். படம் போட்டிருக்கு. என்று பதட்டத்துடன் பேப்பரை நீட்டினான் சங்கரின் அம்மாவிடம்.

ஐயோ என்ர மகனே என்று கதறியபடி.. பேப்பரை பறித்துப் படித்த அம்மா.. மூர்ச்சையானாள்.. மகனின் ஏக்கத்தில்..! பசுபதி மாமா.. அவரைத் தாக்கியவராய்.. சங்கருக்கு மனதோடு வீரவணக்கம் செய்தார்.

சங்கரும் தான் காதலிச்சான்.. காயத்திரியை மட்டுமல்ல.. அதற்கு மேலாய் தாயக மண்ணை.. அப்படித்தான் ஒவ்வொரு கரும்புலியும். இது சங்கரின் வீர வணக்க நிகழ்வில் அவனின் உற்ற தோழர்களில் ஒருவன் சொன்ன வார்த்தைகள்.

காதலிகளின் பின்னால் அலைவதும்.. பின் பிரிவால் வாடுபவனாயும் எண்ணிக் கொண்டு தாயகத்தை மறந்து, வீணே குடியால், புகையால் சீரழியும் தொலை தூரத்தில் தாயக உறவறத்து இருக்கும் எனக்காய் சொன்னான் போலும் அவ்வார்த்தைகளை..!

(யாவும் கற்பனை.)

மூலப் பதிவு பெறப்பட்ட இடம் இங்கு.

Labels: , ,

Wednesday, June 18, 2008

நீ என் உயிர் தானா?!



செல்லிடபேசி கிணுகிணுக்க பதறி அடிச்சு எழுந்த வசன் நேரத்தைப் பார்த்தான். மணி நள்ளிரவு 12.30. வேலைக் களைப்பால் விழுந்து படுத்தவன் நித்திரைக் கலக்கத்தில், "எவண்டா இந்த நேரத்தில.." செல்லிட பேசியைக் காதில் வைத்தபடி மனதில் எண்ணத்தை ஓட விட்டான்.

"உங்கட அவாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. உடன வைத்தியசாலைக்கு வரட்டாம்" என்று சொன்னதோடு மறுமுனை இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறது.

வேலை முடிச்சிட்டு இவ்வளவு நேரம் அங்க தானே நின்றிட்டு வந்தன். இப்ப பிறக்காது 48 மணி நேரம் ஆகும் எண்டாங்கள். அதுக்குள்ள... என்று மனசுக்குள் நினைத்துவிட்டு.. தனது குழந்தையின் முகத்தை காணுற சந்தோசம் மனசில பொங்க.. மனுசி தனிய என்ன பாடுபடுகுதோ என்று எண்ணியபடி பதறியடித்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி மகிழுந்தில் விரைந்து ஓடினான் வசன்.

நல்வரவு வசன். இங்க தான் தாயும் குழந்தையும் இருக்கினம். உங்களைத் தான் வசந்தா தேடிக் கொண்டிருக்கிறாள் என்று கூறியபடி வைத்தியசாலைப் பணியாள் வசனை தாயும் சேயும் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

எப்படி இருக்கிறாய் வசந்தா. பிரச்சனை ஒன்றும் இல்லையே. எங்க குழந்தையைப் பார்ப்பம் என்று வசன் தன் குழந்தையைப் பார்க்கும் தன் ஆர்வத்தை துணைவியின் அருகில் சென்று நின்றபடி அவளின் கரங்களைப் பற்றிப் பிடித்தபடி வெளிக்காட்டினான்.

இங்க தான் இருந்தவ உங்க மகள். தடுப்பூசி ஒன்று போடக் கொண்டு போயிருக்கினம். பொறுங்கோ இப்ப கொண்டு வந்திடுவினம் என்று வசந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

"கலோ" வசன். உங்கள் குழந்தைக்காகக் காத்திருக்கிறீங்கள் போல. இதோ உங்கள் குழந்தை. என்று கூறியபடி தான் தாங்கி இருந்த குழந்தையை வைத்தியர் வசனின் கையில் கொடுத்தார்.

குழந்தையைக் கண்டதும் வசனிடத்தில் மகிழ்சிக்குப் பதில் வியப்பே மிஞ்சியது.

டொக்டர் இது எங்கட குழந்தை தானா..?!

என்ன கேள்வி வசன். உங்கட மனைவி உங்களிடம் விசயத்தைச் சொல்லேல்லையா..?! இது அவாவுக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்திருந்தாலும் உங்கட குழந்தைதான்.

என்ன இன்னொருத்தருக்குப் பிறந்த குழந்தையா..??! என்று ஆச்சரியம் மேலிட ஆத்திரம் பொங்க கத்தினான் வசன்.

என்ன வசந்தா உங்கட அவரட்ட நீங்கள் விசயத்தை சொல்லாமல் மறைச்சுப் போட்டிங்கள் போல என்று டாக்டர் வசந்தாவைக் கேட்டார்.

ஓம் டொக்டர். நான் இவரட்டச் சொல்லேல்ல. சொன்னா இவரால தாங்க முடியாது. இப்ப நீங்களே சொல்லுங்கோ டொக்டர் அப்பதான் இவருக்கு ஒரு ஆறுதலா இருக்கும்.

என்ன நடக்குது இங்க. ஏன் எல்லாருமா சேர்ந்து என்னை ஏமாத்தினியள். இப்ப அது போதாது என்று இன்னும் ஏமாத்த நிற்கிறியள்.. இது என்ர குழந்தையே இல்லை.. இன்னொருத்தனுக்கு பிறந்த இதை என்ர குழந்தையா ஏற்க முடியாது.. என்று தலையில் கை வைத்தபடி கத்திய வசன், தனக்கு துரோகம் இழைத்து விட்டதாய் எண்ணி வசந்தாவை முறாய்த்துப் பார்த்தபடி விறைத்துப் போய் நின்றான்.

வசன்.. உண்மையில உங்களுக்கு செய்த சோதனையில உங்களிடம் குழந்தையை உருவாக்கக் கூடிய வளமான உயிரணுக்கள் இருக்கேல்ல. அதனால குழந்தைக்கு ஆசைப்பட்ட வசந்தாவுக்கு எங்களால முடிந்த உதவியைச் செய்ய முன் வந்தம்.

வைத்தியசாலையில உயிரணு வங்கியில இருந்து பெற்ற பெயர் குறிப்பிட முடியாதவரின் உயிரணுவை வசந்தாவின்ர முட்டையோட கருக்கட்ட வைச்சு IVF முறையில இந்தக் குழந்தையை உருவாக்கி உங்க மனைவிக்கு பிள்ளைப் பாக்கியத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறம். வசந்தாவின்ர முழு அனுமதியோட தான் இதைச் செய்தம். உங்களின் அனுமதியைப் பெற முனைந்த போது வசந்தா தான் இதை உங்களிடம் பக்குவமாச் சொல்லுறதா சொன்னா. அதால தான் நாங்கள் இது பற்றி உங்களட்ட எதுவும் சொல்ல முடியல்ல.

டொக்டர் சொல்லுறது உண்மை தாங்க. நீங்க மனசுடைஞ்சு போவீங்க என்றுதான் இதை நான் உங்களுக்குச் சொல்லேல்ல. குழந்தை பிறக்கவிட்டு விசயம் தெரிய வரேக்க சொல்லுவம் என்று விட்டுட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க என்று வசனின் கையைப் பிடித்து முத்தமிட்டவளாய் கெஞ்சினாள் வசந்தா.

இன்னொருவரின் உயிரணுவில் பிறந்த அக்குழந்தையையும், உண்மையை மறைத்து தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட வசந்தாவையும் ஏற்பதா விடுவதா என்ற குழப்பத்தில் இருந்த வசன் துணைவியின் கெஞ்சலில் வழிந்த கண்ணீரில் அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனாய் குழந்தையும் தாயையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான். தன்னவளின் உயிரணுவில் உருவானதை தன் உறவாக்கும் மன உறுதியோடு.

-யாவும் கற்பனை.

யாழ் இணையம்.

Labels: ,

Friday, June 13, 2008

தேவதையின் பாதங்கள் பற்றி...



பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது.

சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள்.

சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க ஏக்கம் தணிப்பவளாய் பலர் பேர் நின்றிருந்த அந்த வரிசையில் கடைசி ஆளாய் வந்து ஏறி என் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் என் எண்ணங்களை கற்பனை வானில் பறக்கவிட்டு.... அவள் கைபிடித்து உலா வந்து.. திருமண மேடையேறி.. குழந்தை பெற்று.. இன்புற்றுக் கொண்டிருந்தேன்.அவளோ என்னருகில் முட்டியும் முட்டாமலும் அமைதியாக இருந்து கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே.. அவள் பூசி வந்த நறுமண திரவியங்களின் வாசனை என்னை விட்டு விலகத் தொடங்க.. அதுவரை கற்பனைக் கனவில் இருந்த நானும் விழித்துக் கொண்டேன். அவள் இருந்த இடத்தில் இருந்து எழுந்து நகர ஆரம்பித்திருந்தாள். நானும் விடுவதாய் இல்லை. அவளைப் பார்வைகளால் பின் தொடர்ந்தேன். ஆகா இது எல்லோ இடை.. ஆகா இது எல்லோ நடை.. ஆகா இது எல்லோ கூந்தல்.. இவளைக் கம்பன் கண்டிருந்தால் எப்படி எல்லாம் வர்ணித்திருப்பான்.. இவள் இக்கால தமயந்தி நானோ இக்கால நளன் என்று மனம் ஆயிரம் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்க பேரூந்தும் பிறிதொரு தரிப்பிடத்தில் நின்றது.

அவளோ பூம்பாதங்கள் தரையில் பதிய பேரூந்தை விட்டு இறங்க ஆயத்தமானாள். ஏன் நானும் அவளைப் பின் தொடரக் கூடாது என்று என் மனம் கேள்வி கேட்க என் கால்கள் கேள்விக்கு விடையாய் அவளைப் பின் தொடர்ந்தன.

நான் அவளைத் தொடர்வதை அறியாதவளாய் என் அழகு தேவதை பேரூந்தில் இருந்து இறங்கி பிரதான வீதியில் இலக்கு நோக்கி நடந்தாள்.

மின்னல் வேகத்தில் உந்துருளிகள் ஆயுதம் ஏந்திய வீரர்களை காவிக் கொண்டு பறக்கின்றன. இவளோ பிரதான வீதியைக் கடக்க நிற்கிறாள். நானோ அவளை விட்டு ஒரு 50 மீற்றர் தொலைவில் அவளையே ரசித்தபடி அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். திடீர் என்று ஒரு வெடியோசை காதைப் பிளக்கிறது.

அதன் பின்னர், என் சித்தம் தெளிந்த போது நான் வைத்தியசாலையில் கட்டிலில் உடற் காயங்களோடு வலியில் முனகலுடன்...

அருகில் மடிக்கப்பட்டுக் கிடந்த தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகப்பில்.. மங்கல் அடித்திருந்த என் பார்வையில் அவள் முகம். தற்கொலை குண்டுதாரி. தகவல் தரவும். வரிகள் கொட்டை எழுத்தில்...!

மனதுக்குள் " சலூட்" அடித்துக் கொண்டேன். என் மன வானில் சிட்டாய் பறந்தவள்.. ஒரு விடுதலைப் போராளி. பெருமைப் பட்டுக் கொண்டேன். அன்று கற்பனையில், அவள் பாதம் பதிந்த பாதையில் நடந்த நான் இன்று நிஜத்தில் அவள் பாதையில் நடக்க நிற்கிறேன்.

-யாவும் கற்பனை.

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

Thursday, June 05, 2008
Wednesday, May 28, 2008

மாற்றுக் கருத்து என்பது தமிழீழ தேச துரோகமே. ஜனநாயகம் அல்ல.



ஜனநாயகம் எதிர்க்கட்சியை அனுமதிக்கிறது. மாற்றுக் கட்சியை அனுமதிப்பதில்லை. உலகில் எந்த நாட்டிலும் ஒரு கட்சிக்கு மாற்றுக் கட்சி என்று ஒன்றில்லை. ஆனால் உலகில் தமிழீழத்தில் அந்த தேச இருப்புக்கு எதிரான செயற்பாட்டுக்கு, துரோகத்தனத்துக்கு எதிரியானவன் இட்டுள்ள பெயர் மாற்றுக் கருத்து, மாற்றுக்கட்சி அவற்றைச் சொல்பவன், நடத்துபவன் மாற்றுக் கருத்தாளன். அவர்களின் துரோகத்தனத்துக்கும் அவர்களின் துரோகக் கொள்கைகளுக்கும் பூசப்பட்டுள்ள முலாம் ஜனநாயகம்.

ஒரே கொள்கைக்காக நாலு கட்சிகள் வைப்பதையும், ஒரே கருத்தை.. நாலு பேர் வேறுபட்ட வடிவத்தில் சொல்ல நிற்பதையெல்லாம் ஜனநாயகம் என்று சொல்வதில்லை. அதுமட்டுமன்றி...

ஒரு தேசத்துக்குரிய கட்சிகளுக்கு.. அவர்கள் என்ன தான் தமக்கிடையே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், தேசத்தின் இறையாண்மை.. அதன் தேசியம்.. தேச நலன்.. தேச அங்கீகாரம்.. போன்ற அடிப்படைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி அவர்கள் இவற்றை ஏற்றும் மதித்தும் நடக்கும் பட்சத்திலே தான்.. அவர்கள் அங்கு ஜனநாயகம் என்பதன் கீழ் செயற்பட அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய இறையாண்மையை மதிக்காத ஒரு கட்சியை இந்தியா ஜனநாயகம் என்று அங்கு செயற்பட அனுமதிக்குமா. இல்லை..!

உதாரணத்துக்கு.. அமெரிக்காவின் இறையாண்மையை அல்லது அமெரிக்காவின் தேசியத்தை.. அல்லது அதன் தேச நலனை அல்லது தேசத்தை எதிர்க்கும் கட்சி அங்கு இருக்க வாய்ப்பில்லை..! அமெரிக்க தேசத்தை தற்போதைய நிலை வரையான அதன் கட்டமைப்பின் எல்லைகளின் கீழ் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட கட்சிகள் தான்.. அதனை அரசாள என்று அமையும் கொள்கைகள் அளவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்று இருக்கின்றன. அவை ஒரு போதும் அமெரிக்க தேசம்.. தேச நலன்.. அதன் இருப்பு.. அதன் தேசியக் கூறுகள்.. அதன் பொது வெளிவிவகாரக் கொள்கை வகுப்புக்கள் இவற்றில் எல்லாம் எந்த செல்வாக்கும் செய்ய முடியாது.

தமிழ் மக்களின் தேசம்.. தமிழீழம். தேசியம்.. தமிழ் தேசியம்.. தேச நலன்.. தேசத்தின் இருப்பு... அதன் இறையாண்மை.. இவற்றை அங்கீகரிக்காத எவரும் தமிழ்மக்களை ஆள தகுதியற்ற ஜனநாயகவாதிகளே.

அந்த அடிப்படையில்.. இவர்கள் பேசுவதனைத்தும் ஜனநாயகமே அன்று. இவை தேசத்துரோகங்கள். அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை காட்டிக் கொடுப்பவன்.. அல்லது விற்பவன்.. அமெரிக்க தேசத்துரோகி. அமெரிக்க தேசத்தின் இருப்பை அதன் தேசியத்தை நிராகரிப்பவன்.. அந்த தேசத் துரோகி.

அதேபோன்றதுதான்.. தமிழீழம் என்பதும். அது விடுதலைப்புலிகளின் கோரிக்கையல்ல. ஒவ்வொரு தமிழீழத் தமிழனின் பூர்வீக உரித்து. அந்த வகையில் அதனை நிராகரித்துவிட்டு.. தமிழ் மக்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது.. தேசத் துரோகம். தமிழீழம்.. தமிழ் தேசியம்.. தேச இறையாண்மை.. தமிழ் மொழி இவற்றை அங்கீகரிக்காத.. எந்த பேடிகளும் துரோகிகளும்.. ( அவர்கள் கல்வியில் ஒரு சில துறைகளில் பெற்ற பட்டங்களை வைத்துக் கொண்டு.. அவர்களுக்கு தேவையற்ற சமூக முன்னுரிமை அளித்து..) மாற்றுக் கருத்தாளர்கள் என்ற தோறணையில் கருத்துக்களை விதைப்பதை அனுமதிப்பது தமிழீழ தேசத்துக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகவே கருத வேண்டும்.

தமிழர்கள் எம் ஒரே இலட்சியம். தமிழீழ தேசம். அது கனவல்ல. அது வரலாற்று உண்மை. ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை விடிவிப்பது என்பதற்கும்.. அதன் இறையாண்மையை மீள நிலைநாட்டுவதற்கும் என்று அங்கு ஒரு மாற்றுக் கருத்தில்லை. தமிழீழம் என்றது ஒரு கருத்துத்தான். அது இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடக்கிய தேசம். அதற்கு மாற்றுக் கருத்து என்ற ஒரு மண்ணாங்கட்டி அங்கில்லை...!

அப்படி தமிழீழத்துக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்கள்.. புலிகளின் துரோகிகள் அல்ல. தமிழீழ பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்களின் தேசத் துரோகிகள். அவர்களை எல்லாம்.. ஜனநாயகவாதிகளாகவோ.. தமிழீழ தேசத்தின் எதிர்கால எதிர்க்கட்சிகளாகவோ இனங்காண்பது மிகப்பெரிய தவறு. அவர்களைத் தெளிவாக தமிழீழத் தேசத்துரோகிகளாக அடையாளம் காணலாம்..! அப்படி அடையாளம் காண்பதில் எந்தத் தவறும் இல்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை விமர்சிப்பது வேறு. தமிழீழத்தை நிராகரிப்பது, காட்டிக்கொடுப்பது என்பது வேறு. தமிழீழத்தை அங்கீகரித்து நின்று கொண்டு.. தமிழீழ மக்களின் உரிமைகளை பாதுகாத்து நின்று கொண்டு... தமிழீழத்தை அங்கீகரித்து நிற்கும் புலிகளோடு.. ஜனநாயக ரீதியில் தமிழீழ தேசத்தில் எதிர்க்கட்சி வரிசையில் மக்களை ஆள.. தமிழீழ தேசத்தை திறம்பட நிர்வகிக்க என்று போட்டிக்கு நிற்கலாம். அது ஜனநாயகம். ஆனால்... அப்படியன்றி.. தமிழீழத்தை அங்கீகரிக்காது.. சிறீலங்காவுக்கு தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து.. விலை பேசி விற்கும்.. தேசத்துரோகக் கருத்துக்களாக முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள்.. எனப்படுபவை.. தமிழீழத் தேசத் துரோகங்களே..! அது மரண தண்டனைக்குரிய குற்றங்கள். இது தமிழீழத்துக்கு மட்டுமானதல்ல. உலகெங்கும் தமக்கென்றான இறைமையுள்ள தேசத்தில் வாழ விரும்பும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் அவர்களை நிர்வகிக்கும் சக்திகளின் நிலைப்பாடும் இதுவே.!

தமிழீழம் என்ற தேச இருப்பையே அங்கீகரிக்காதவன்.. தமிழீழத்தில் எப்படி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆக முடியும். தமிழீழ தேசம்.. அதன் மொழி.. அதன் எல்லைகள்.. அதன் இறையாண்மை.. அதன் தேசியம்.. அதன் நலன்.. இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவற்றை எல்லாம் பாதுகாக்க உறுதி பூணுபவனுக்கே தமிழீழத் தமிழர்களை ஆளும் தகுதியும் தமிழீழத்தை நிர்வகிக்கும் தகுதியும்.. அவர்கள் ஜனநாயக வழியில் தமிழீழத் தாயகத்தில் செயற்படவும் வழி இருக்கும்.

அந்த வகையில் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும்.. இன்னும் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் இருக்கும்.. ஆனால் தமிழீழத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தோ துரோகச் செயலோ செய்யாதவர்களும் சொல்லாதவர்களும்.. இதற்குள் அடக்கப்படலாம்.

தமிழீழ தேசத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கியவன்.. கூறுபோட்டவன்.. தமிழ் மொழியை.. தமிழ் தேசிய அடையாளங்களை.. மக்களை சிதைத்தவன்... தேசத்தை சிறுக சிறுகச் சிதைக்கும் எதிரிக்கு துணை போனவன்.. தமிழீழத்துக்கு எதிராக செயற்படுபவன்.. அல்லது கொள்கை வகுப்பவன்.. அல்லது பேசுபவன்.. தமிழீழத்தை எதிர்க்கும் எதிரியுடன் சேர்ந்து இயங்கி தேசத்தின் இருப்பை அழிக்க நிற்பவன்.. எவனும் தமிழீழத்தில்... ஜனநாயகத்தின் படி.. எதிர்க்கட்சியாளனாகவோ.. அல்லது ஆளும் கட்சியாளனாகவோ ஆக முடியாது. அவர்கள் தெளிவாக உலக நியதிப்படி.. தேசத் துரோகிகள் என்று தெளிவாக இனங்காணப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது தேசத்தை விட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.

1972 இல் சிறீலங்காவின் இறையாண்மையை, தேச நலனை மதிக்காது செயற்ப்பட்டதற்காக 1978ல் அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா முன்னாள் சிறீலங்கா பிரதமரான சிறிமாவோ அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். நாடு கடத்தவும் திட்டமிட்டார்.

தங்கள் நாடுகளை குட்டிச் சுவராக்கிய குற்றத்துக்காக ஜேர்மனியின் முன்னாள் அதிபர் கிட்லர்.. உகண்டாவின் முன்னாள் அதிபர் இடியமீன்.. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ்.. போன்ற பல தலைவர்கள்.. தங்கள் சொந்த தேசத்தின் இருப்பை.. இறையாண்மையை சிதைக்க விளைத்தது என்பதன் அடிப்படையில் நாட்டை விட்டு மக்களால், மக்கள் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

மாறாக சொந்த தேசத்தைப் பாதுகாத்து.. அதன் எல்லைகளை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து.. ஒரு நாட்டை அதன் தேசிய இனத்திடம் கையளித்த எந்தப் போராளிகளும் மக்களால் விரட்டி அடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழீழ தேசத்தின் எல்லைகளை மீள நிறுவி.. அதனை மீட்கவும் பாதுகாக்கவும் போராடும் விடுதலைப்புலிகளும் எப்போதும் விரட்டி அடிக்கப்படமாட்டார்கள்.

தமிழீழத்துக்கு மாற்றாக ஒரு தாயகம் இலங்கைத் தீவில் தமிழருக்கு இல்லை. அங்கு மாற்றுக் கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த வகையில்.. தமிழீழத்தை எவ்வெவ்வழிகளில் எல்லாம் எதிர்க்கின்றனரோ.. அது தேசத்துரோகமே அன்றி.. அதை, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு.. அதற்குள் நின்று கொண்டு மக்களை ஆள, தேசத்தை நிர்வகிக்க.. ஜனநாயக வழிமுறையில் ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி அமைத்து செயற்படுவதற்கான, ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாக கருத முடியாது. இதை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள், மக்கள் மற்றும் உறவாளர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் பட்டம் கொடுப்பது.. அந்தத்துறைக்கு. தமிழருக்காக தமிழீழத்துக்கு மாற்று தேசம் கண்டு பிடித்தத்ததற்காக அல்ல. எனவே அந்தப் பட்டதாரி புடலங்காய் தாரிகளைக் கொண்டு போய்.. குப்பையில் போடுங்கள் அல்லது தேவையான கல்வி சார் கூடங்களில் பாவியுங்கள். தமிழீழம் என்ற தேசத்தை அங்கீகரிக்க.. அதன் வரலாற்று பூர்வீக இருப்பே போதும். அங்கு வாழ்ந்த எம் சந்ததியினரின் அடையாளமே போதும். அதற்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே தமிழீழம் சார்ந்து வரும் மாற்றுக் கருத்து என்பது.. தமிழீழ தேசத் துரோகக் கருத்து. தமிழீழத்தை துண்டாடும் கருத்து என்பது.. தமிழீழ தேசத்துக்கு எதிரான துரோகக் கருத்து. அவற்றை அங்கீகரிப்பது.. அல்லது பரப்புரை செய்வது.. பேசுவது.. தமிழீழ தேசத்துரோகமே.. அன்றி ஜனநாயக அரசியல் அல்ல...!

மூலம் இங்கு

Labels: , , ,