Saturday, September 12, 2009

திலீபன் அழைப்பது சாவையா..இந்தச் சின்ன வயதில் அது தேவையா.?!



1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது.

(திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.)

----- நினைவுப் பதிவு-----

தியாக தீபமே
விடுதலைத் தீயே....
அன்னை மடியில்
நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..!
தமிழீழ மண்ணில்
நீ பதித்த பாதச் சுவடுகள்
கருவறைகளாய்
சாதனைகளைப் பிரசவிக்கின்றன...!

அண்ணா..
உன் உயிர் தந்து
தமிழீழ விடுதலைக்கு
நீ..
உயிர் கொடுத்தாய்..!
உன் தியாகம் என்றும்
விலை போகாது..!

நீ சுமந்த விடுதலைக் கனவு
நனவாகும் நாள் தொலைவில் இல்லை..
நீ நேசித்த தலைவன் வழி
மக்கள் நடத்தும்
களம் சொல்லுது கதை...!

இடையில்..
மறவர் படை
சதிகாரரால் வீழலாம்...
அவர் கொண்ட இலட்சியம்
என்றும்.. வீழாது.

விடுதலை வீரர்களும்
இலட்சியம் ஒரு நாள் வெல்லும்.
அதுவரை..
நீ தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு.!

உன் கல்லறைப் பூக்கள்
சொல்லும்
தேசத்தின் விடுதலைச் சேதி..!



ஆக்கம் குருவிகள் - 12-09-2009


Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:25 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க