இதயம் பேசினால்..
ஆணும் பெண்ணும் கூடிக்குலாவிட
உருவாகிய ஓர் கலம்
பல்கிப் பெருகிட
பெண்ணவள் கருப்பையில்
உதித்தவன் நான்.
செய்த குற்றம் ஏதுமில்லை
பிறப்பின் போதே
ஆயுள் தண்டனை எனக்கு.
நெஞ்சுக்குழியினில் நிரந்தர
சிறை வைப்பு..!
அக்கம் பக்கம் நகர முடியா
ஓய்வின்றிய உழைப்பு
அதுவே..
எனக்கு விதித்த விதிப்பு
ஊதியம் தான் ஏதுமில்லை
சிறையுடைக்க வழியுமில்லை.
லப் டப் என் மொழி..
அது பலருக்கு ஊமை மொழி
மணிக்கு இத்தனை தடவைகள்
பேசியும்
கின்னஸ்ஸில் பதிவுமில்லை
என் சாதனைக்கு..!
அறைகள் நான்கு
அழுத்தங்கள் அங்கு
திக்குமுக்காடி
ஓடும் குருதி
நேசத்தோடு பாசம் காட்டி
உடலெங்கும் போய்
செய்தியோடு காவி வரும்
உணவும் காற்றும் நான் வாழ.
கட்டளைக்கு பணிபவனல்ல
இருந்தும்..
கட்டுப்பாடுகள் எனக்கு.
மூளையண்ணன் தயவதில்
கொஞ்சம் ஆறுதல்கள்
நித்திரையெனும் தேவி துணையில்..!
கொழுப்பும் உப்பும்
வெல்லமும் சோம்பலும்
என் எதிரிகள்
அவையே
என் உயிர் பறிக்கும் காரணிகள்.
என் நர்த்தனம் முடியும் வேளை
உலகே அழும்..
எனக்காய் அல்ல..
என்னைத் தாங்கிய சிறைக்காய்..!
நன்றி கெட்ட உலகமடா இது.
காதலின் சின்னமாய்
நான் வாழ்கிறேன்
ஆனால்
எனக்கோ காதலிகள் யாருமில்லை
என்றும் தனியாள்.
நானே...
உன் நெஞ்சுக்குழியில் துடிக்கும்
இதயம்..!
Labels: கவிதை
4 மறுமொழி:
இதயம் கோவமாப் பேசினா எப்படி இருக்கும்.
நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.
நன்றி.
இதயம் கோபமாப் பேசாக் கூடாது, பேசினால் BP அதிகமாயிடும். :))))
>> எனக்கோ காதலிகள் யாருமில்லை
>> என்றும் தனியாள்
அப்படிச் சொல்லப்படாது. இன்னுமோர் இதயம் பேசும் "லப் டப்" மொழி உங்கள் இதயத்திற்குக் கேட்கவில்லையா?
அனானி, இதயத்துக்குப் பேசத் தெரியும். கேட்கத்தெரியாதே..! அதைக் காதும் மூளையும் தான் செய்யும்..! :)))