கொன்றவனையே காப்பாற்ற எண்ணும் ஈ(ழ)னத்தமிழர்கள்.
செம்மணி.
ஈழக்களத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமான கட்டங்கள். அவை இரண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை. ஒன்று சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்திலும் (95-2005) மற்றையது தற்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சந்திரிக்காவின் வெளித்தோற்றம் சமாதான தேவதை. உள்நோக்கம் போர், தமிழ் இன அழிப்பு.
மகிந்தவின் வெளித்தோற்றம் உள்நோக்கம் எல்லாமே போர் மற்றும் இன அழிப்பு.
இவர்களின் நோக்கங்களை நிறைவு செய்ய எப்போதும் தயார் நின்றவர்களில் ஒருவர் தான் சரத் பொன்சேகா.
சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வு என்ற பெரிய இடம்பெயர்வை தமிழ் மக்கள் அனுபவித்தனர். அது சந்திரிக்கா ஏவிவிட்டிருந்த போர் காரணமாக நிகழ்த்தப்பட்டிருந்தது.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் இராணுவத்தலைமையில் இருந்து கொண்டு மிகப்பெரிய மக்கள் அவலத்தை ஏற்படுத்தியவர் சரத் பொன்சேகா. அதுமட்டுமன்றி உலகமே அச்சமுறும் வகையில் இருந்த செம்மணிப் புதைகுழிகளின் சூத்திரதாரியும் இவரே. அப்புதைகுழிகள் பல நூறு அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளின் சமாதிகளாக மாற்றப்பட்டுவிட்டதுடன் அவற்றிற்கான விசாரணைக்குரல்களும் ஒலித்து அடங்கிவிட்டன.(ஏன் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அந்தப் புதைகுழிகளை மறந்தே விட்டனர். இன்றேல்.. சிங்களப் படைகள் சிங்களத்திகளை வைத்து ஆட்டும் இடுப்பாட்டத்தில் எடுப்பட்டு திரிவார்களா என்ன..??!)
அதன் பின்னர் சரத் பொன்சேகாவின் வெறியாட்டத்திற்கு இடமளித்தவர்களில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அடங்குவர்.
சன்னதமாக நின்று மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழர்களின் பிணங்களை எண்ணிக் கணக்கிடுவதையே கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2009 வரை தொழிலாகச் செய்து வந்தார் சரத் பொன்சேகா.
அவரின் இராணுவத்தலைமையின் கீழ் சிங்களப் படைகள் மிக மோசமான போரியல் விதிமுறை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்துமுடித்துவிட்டு இருந்த நிலையில்..
மகிந்தவின் சர்வதேச அரசியல் அணுகுமுறையால் தூர விலக்கப்பட்டு நின்ற மேற்குலக நாடுகளுக்கு அவற்றின் தேவையை சிறீலங்கா மீதான நெருக்கத்தை நெருக்கடியை அதிகரிக்க தேவைப்பட்டதே போர்குற்ற குற்றச்சாட்டுக்கள்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் என்பது இராணுவத்தலைமைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையும் அல்ல. ஆனால் அரசியல் தலைமைகளுக்கு அவை கதிக்கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சிறீலங்கா ஐநா வரை பல நாடுகளிடம் மன்றாடிக் கெஞ்ச வேண்டிய நிலை வந்த போதுதான் சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகள் கூடிப் பேசின.
அரசியல் எதிரிகளான ரணிலும் மகிந்தவும் சந்தித்துப் பேசினர். தேசிய அரசு அமைப்பது பற்றியது என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டனர். அப்பேச்சின் போது மகிந்த அரசு சிங்கள இனத்திற்கு பெற்றுத்தந்த போர் வெற்றியால் அதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருந்த அழுக்கை கழுவிடலாம் சிறீலங்கா மீதான போர்க்குற்றங்களை தவிர்த்து பெருமளவு சர்வதேச நிதியை தம்வசப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டனர்.
இருந்தாலும் தேசிய அரசு அமைப்பது அரசியல் தலைமைகளை காக்கலாம். ஆனால் பெரும் மனித அவலங்களை தந்து தமிழர்களை ஒரு வகை பண்ணிய சிங்களப் படைகளையும் அதன் தலைமையையும் பாதுகாக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்து கொண்ட சிங்களப் பேரினவாதிகள்..
திட்டம்போட்டு ஆடும் நாடகத்தின் ஒரு பகுதியே சரத் பொன்சேகாவின் ஜனநாயக வேசமும் அரசியல் பிரவேசமும் ஜனாதிபதி ஆசையும்.
ஒரு வெளிப்படையான போர்க்குற்றவாளியை, சிங்கள பேரின தேசிய வாதியை சிங்களப் பேரினவாதத்தலைமைகள் மிக இலாவகமாக பாதுகாத்து அவருக்கு சிங்கள மக்களின் ஆதரவும் உண்டு ஏனைய சிறுபான்மை மக்களின் ஆதரவும் உண்டு என்பதைக் காட்டி உலகின் போர் குற்றங்களில் இருந்து அவரையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் உச்சக்கட்டமே இந்த சரத் - மகிந்த - ரணில் அரசியல் நாடகம்.
மகிந்தவோ.. சரத்தோ அல்லது கோத்தபாயவோ போர்க்குற்றவாளியாகி சர்வதேசக் கூண்டில் ஏறின் அண்டையில் இருந்து அவர்களுக்கு முண்டு கொடுத்த இந்தியா உட்பட்ட நாடுகளுக்கும் சிக்கல்கள் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் என்ற நிலையில் இந்தியாவும் இந்த பேரினவாதிகளின் நாடகங்களுக்கு கூட இருந்து சாமரம் வீசி வருகிறது.
அதுபோதாதென்று சொந்த இனத்தையே பதறத்துடிக்க கொன்றவனுக்கே வாக்கு வாங்கிக் கொடுக்கும் நிலைக்கு தமிழ் தேசியம் பேசிய கூட்டமைப்பை கொண்டு வந்துவிட்டுள்ளது இந்திய தேசம்.
சரத் பொன்சேகா.. ஒரு சிங்கள பேரினவாதி மட்டுமன்றி சிறீலங்கா சிங்களவர்களின் தேசம் என்பதை கொள்கையாகக் கொண்டவர். அப்படிச் சொல்லியேதான் போரும் செய்தவர்.
மகிந்தவும் சரத்துக்கு சளைத்தவர் அல்ல. அதனால் தான் இருவரும் ஓரணியில் நின்று மிகப்பெரிய இன அழிப்பை வெற்றிகரமாகச் செய்துமுடித்துவிட்டு இன்று ஜனநாயகப் போர்வைக்குள் புகுந்து கொண்டு சமாதான புருசர்களாக காட்சி தர கேட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் இந்த அவதாரங்களின் பின்னால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல அதற்கு முண்டுகொடுத்த அண்டை அயல் நாடுகளும் அருள் பெறுகின்றன என்பதுவே முக்கியமானது.
இந்த நிலையில் இந்த அவதாரங்களில் எதைப் பூஜிப்பதால் தாங்கள் தப்ப முடியும் என்று தமிழர்களையும் சிந்திக்கச் செய்துள்ளன இந்த அவதார புருசர்களை தோற்றுவித்துள்ள போர்க்குற்றத்தைச் செய்த அல்லது செய்யத் தூண்டிய உலக சக்திகள்.
இவற்றைப் பற்றிய எந்த விளக்கமும் இன்றி குறுகிய நலன்களில் கூட உத்தரவாதமற்ற வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்களின் வாக்குகளை பூஜைப்பொருட்களாக்கி தம்மை பூஜகர்களாக்கிக் கொண்டிருக்கின்றன தமிழ் தேசியக் கட்சிகள்.
இதுதான் தமிழினத்தை கடந்த ஆண்டில் இதே நாட்களில் கொன்றுகுவித்தவர்களுக்கு தமிழர்கள் காட்டும் செங்குருதிக்கடன் என்றும் அவை நம்ம வைத்துள்ளன..!
இதுதான் இந்த உலகின் ஜனநாயகத்தின் உண்மை முகமும் கூட..! தமிழர்களின் இயலாமைக்குள் இன்று பலரும் பயன்பெறும் நிலை கண்டு என்ன செய்ய முடிகிறது. வேடிக்கை பார்ப்பதை விட...??!
Labels: அரசியல், ஈழம், மக்கள் பார்வை.
3 மறுமொழி:
அப்ப என செய்யலாம் அண்ன ம்கிந்தாவை ஆதரிச்சு எட்டுவருசம் இதே கொடும்மையை அனுபவிப்பமா? அல்லது கருனாரட்னாவை ஆதரிச்சு ம்கிந்த வெல்லும் சந்தர்ப்பத்தை கொடுத்து இதே கொடுமையை எட்டு வருசத்துக்கு அனுபவிப்பமா? அல்லது சிவாஜி லிங்கத்தை ஆதரித்து மகிந்த வெல்லும் சந்தர்ப்பதை கொடுத்து இதே கொடுமையை எட்டு வருசம் அனுபவிப்பமா?
என்னதான் செய்ய சொல்லுறீங்கள் உலகநாடுகள் உதவி செய்யும் எண்டுறீங்களா ஜந்து நாளாகிழும் கெயிற்றிக்கு இன்னமும் உதவி போய் சேரவில்லை, இறந்தவர்களின் உடலகளை வீதியில் போட்டு வீதி மறீயல் செய்கிறாகள் கெயிற்றி மக்கள், மகிந்தருக்கும் பொன்சேகாவுக்கும் பிணக்கு வராது இருந்தால், உம்ஹ்ஹளால் கனவிலயாவது நினைத்து பார்த்து இருக முடியுமா? மகிந்தாவின் வெறியை தடுக்க முடியுமெண்று.
நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே வலம் வருவது போல் உள்ளது
இந்த ஆய்வு ஏமாற்றத்தையே தருகின்றது
தமிழர்கள் சரத்தை மன்னிக்கவும் இல்லை நம்பவும் இல்லை காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை
வரட்டுக் கெளரவம் எதையும் சாதிக்காது
நான் ஏற்கனவே ஒரு பதிவில் இட்டது
---------
தமிழர்கள் யாரையும் நம்புவதற்கில்லை மேற்குலகமும் எம்மை அழித்ததில் பங்காளிகள் தான் அப்படித் தான் நம்பினாலும் பரவாயில்லை இந்தியாவை நம்புவதிலும் மேற்குலகு பரவாயில்லை
இப்போதைய கையறு நிலைக்கு தற்காலிக தீர்வு பற்றித் தான் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
மூஞ்சூறு தான் போக வழியைக் காணொம் விளக்குமாற்றையும் இழுத்துக் கொண்டு போவது போல் தான்
தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை, வலுவை அழித்து விட்டு பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு கேலிக்கூத்து
இப்போது கொடுப்பதை வாங்குவதை தவிர தமிழர்களிடம் எதுவுமில்லை ஆனால் கொடுப்பதற்கும் யாருமில்லை
தமிழர்களுக்கு இந்த தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது சிங்களவர்களை மோத விடவும் முதல் எதிரியை தோற்கடிக்கவும் மூச்சு விட சில காலமும் மட்டுமே
நாங்கள் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்திருக்கின்றோம் ஆனால் ஒரு வித்தியாசம் எம்மைப் பற்றி ஒப்புக்காவது கதைக்கும் நிலையில் இருக்கின்றோம்
அதை விடுத்து தமிழீழம் சுயாட்சி என்பதெல்லாம் மேற்குலகம் இந்தியா உலக ஆதிக்கம் என்றெல்லாம் பேசுவது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் தான்
வெறும் வீரவசனம் மட்டுமே
யாரையும் குழப்பாதீர்கள் சரத் வெல்லட்டும் என்னதான் நடக்குது என்று பார்போம்
அனோனி மிக அருமையாகச் சொல்லி விட்டார் இனி என்ன சொல்ல ----
எல்லாளன் நாங்கள் எதையும் கண்டு ஏமாற வேண்டாம் என்ற நிலையில் இருக்க வேண்டும். எந்த ஒரு வலுவும் அற்று வெறும் வாக்குமட்டைகளே பலம் என்று தமிழர்கள் நம்பி இருந்தால் 35 வருட போராட்டம் அதற்கு முந்திய தந்தை செல்வாவின் சாத்வீக போராட்டங்கள் அவசியமற்றவை. ஜனநாயக வழியில் வாக்குச் சீட்டுக்களால் பெற முடியாது என்ற போதே தமிழர்கள் ஆயுதம் தூக்கினர். 1977 இல் தமிழ் கட்சிகள் பிரதான எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தனர். அன்றும் கூட எதனையும் சாதிக்க முடியவில்லை. இன்று சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அவரை தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் அவர் பயங்கரவாதிகளையே அழித்து யுத்தம் செய்தார் எனவே அவர் மீதான போர்க்குற்றங்கள் சோடிப்புக்கள் என்று காட்டுவதும் சிங்கள தேசத்திற்கு இலகுவாக முடிகிறது. ஆக கடந்த போராட்ட காலத்தில் உயிர் விட்ட அப்பாவி தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்பதை தமிழர்களும் ஏற்றுக் கொள்வதற்கு தங்கள் வாக்குகளை சிங்களப் போர்க்குற்றவாளிகள் மகிந்தவிற்கும் சரத்திற்கும் போட வேண்டும் என்பதில் உள்ள நியாயம் தான் எனக்குப் புரியவில்லை.
இந்தியா ஈழத்தில் இரு படுகொலையே நடக்கவில்லை என்று சொல்லும் முழுப்பூசணிக்காயை மறைக்க நினைக்கும் நாடு. அப்படியான ஒரு நாட்டை அண்டை நாடாகக் கொண்டது எமது துர்ப்பாக்கியம். இது போதும் எமக்கு இந்தியாவை அடையாளம் காண்பதற்கு.