Wednesday, January 09, 2008

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.



இந்துக்களின் வைமானிக்கா சாஸ்திரப்படி அமைந்த அடக்குமாடி விமானப் பறப்புக்கான முன்னோடிச் சிந்தனை வரைபடத்தில்.

விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்-

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார்.



நவகால பறப்புப் பொறியியலின் கீழ் வடிவமைக்கப்பட்ட இரட்டைத் தட்டு போக்குவரத்து விமானம் A-380.

உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவுகணைகள் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் கூட தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மிகப்பழைய காலம் முதலே இவை பற்றி குறிப்புக்கள் காணப்படுவதோடு அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் நம் மூதாதையர்களான இந்துக்களா? என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்து

ரிக்வேதம். இராமாயணம். மகாபாரதம். சமரங்கன சூத்திரா. வைமானிக சாஸ்திரம் எனப்பழைய நூல்களில் விமானம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. இவை வெறும் கற்பனையில் உருவானவை என்றோ மூடநம்பிக்கையை விதைக்கின்ற புராண இதிகாசங்கள் என்றோ நம்மால் அப்படியே ஒதுக்கி விடவும் முடியவில்லை.

ரிக் வேதமானது நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது. இதில் போர்க்கடவுளான இந்திரன் விமானரதத்தில் பறந்து வந்து அசுரர்கள் மீது போர் நடத்தியதாகவும் மயன் இவ் வானவூர்தியை ஓட்டியதாகவும் தகவல்கள் உள்ளன அத்துடன் வருணன் போன்ற தேவர்கள் மிகச்சிறந்த வானவ+ர்தியில் வானவெளியில் சென்றதாகவும் புஷன் என்பவன் மிகச்சிறந்த ஓட்டியாக திகழ்ந்தான். என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது கற்பனையில் உருவானது எனக்கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக்கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக எமது இந்துக்கள் திகழ்ந்தனர் எனக்கருதவும் இடமுண்டு.

அடுத்து இராமாயண காலத்தில் இராவணன் என்னும் தமிழ் மன்னன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி அதில் அவன் விண்வெளி முதல் கொண்டு பல உலகங்களையும் சுற்றி வந்தான் எனவும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது வால்மீகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இவற்றை ஆதாரப்படுத்துவது போல் இலங்கையிலே நுவரேலியா என்னும் மாவட்டத்திலே இராவணன் என்னும் மாமன்னன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் “ குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம் இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்டஇரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப் படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம்.

இக்கருத்துக் கூட கற்பனை என்று மட்டுமே நம்மால் எண்ண முடிகின்றது. உன்மையில் விஞ்ஞானக் கருவிகள் இருக்க முடியாத அந்தக்காலத்தில் ஆகாயத்தில் விமானங்கள் மூலம் பறப்பது பற்றியும் பல மைல்கள் ஏவுகணைகள் போல நெடுந்தூரம் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய அஸ்திரங்கள் பற்றியும் எப்படி அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடிந்தது. என்று நாம் சற்று நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவும் எம் இந்துக்களான பழந்தமிழர் விமானத்தின் முன்னோடிகள் தானா ஆராயவும் தலைப்பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் மயனால் எழுதப்பட்ட மயன் மதம் என்னும் நூலிலும் அதன் விளக்க உரை காட்டும் நூலிலும் வானவூர்தியைப் பற்றியும் அவைகளின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரங்கன சூத்திரா 11ம் நூற்றாண்டில் “இராமச்சந்திர தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது என்பார்கள் இதில் வானவெளிக்கப்பல்கள் எப்படிச் செலுத்தப்பட்டன. அதன் அமைப்பு முறை. என்பன பற்றி விரிவாகக்கூறுகின்றன. அதில் மூன்று விதங்களில் வான்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியும் என்கிறது.

1. கீழிலிருந்து(பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது.

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரியமண்டலம். மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அதன் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லிதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வான்வெளி விமானங்கள் விண்வெளியில் ஏவப்படும் போர்க்கருவிகள் பற்றியெல்லாம் கூறப்பட்டாலும் கூட இதில் சில விடயங்கள் இருந்திருக்கலாம் என்று கருதலாமே தவிர. அவை இருந்தன. என்று கூறுவதற்கு புராண இதிகாசங்கள் ஆதாரமாகிவிடாது. அத்துடன் இதில் வரும் பாத்திரங்கள் கடவுளாகவும் அவதாரங்களாகவும் இருப்பதால் அவர்களால் மனிதனால் நடாத்தமுடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எனச்சொல்லலாம். நம்முன்னோர்கள் கர்ன பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதைகளை காவியமாக வடித்தனர் இருந்த போதும் அந்தக்காவியங்களில் கற்பனை இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. இருந்தபோதும் அந்தக்கால மனிதருக்கு விமானம் பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பட்டது வியப்பானதே.

அடுத்து வைமானிகா சாஸ்திரம் எனும் நூல் “பரத்துவாஜரால் எழுதப்பட்டு இப்போதுள்ள சமஸ்கிருத வடிவில் சுப்புராய சாஸ்திரியால் உருவாக்கப்பட்டது. எனினும் இதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் இதனை “பறக்கும் சாஸ்திரம் பற்றிய விஞ்ஞானம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதில் உள்ள கருத்துக்கள் பழங்கால விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டு நவீனகால விஞ்ஞான அறிவையும் மிஞ்சி நிற்கின்றது.

விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு. விமானம் பறப்பது (ஏறுவது). இறக்கும் போது விமானத்தின் கட்டப்பாடு. எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள். விஷவாயுக்கள். இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும். பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். விமான ஓட்டி அணிய வேண்டிய உடை. உணவுப்பழக்க வழக்கம். விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம். என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப்பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழுவகையான கண்ணாடிகளும் லென்சுகளும் பொருத்தப்பட வேண்டும் இந்தலென்சுகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.

அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும். என்றும் சூரிய ஒளியில் மின்சத்தியைப்பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் கூறிப்பிட்டுள்ளது.

இது நவீன விமானத்தின் லேசர் தொழில் நுட்பத்தையும் விஞ்சி நிற்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் எம் மூதாதையர்களா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

மேலும் ஏழு மோட்டார்கள் மூலம் இவ்விமானங்களை இயக்க சக்தி கிடைப்பதாகவும். சூரியசக்தி. இரசாயண சக்தி. மின்சக்தி. என்பவற்றின் மூலம் விமானம் முன்னோக்கி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பறப்புக்களை மேற்கொண்டதாகவும் இதில் பெரும்பாலும் சூரியஒளியே பயன்படுத்தப்பட்டது. எனும் தகவலும் (வைமானிகா சாஸ்திரத்தில்) உள்ளது.

இந்தத்தகவல் நமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. அல்லவா!. அத்துடன் இதில் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமானவகைகள் இருந்ததாகக் கூறுகின்றது. அதில் ருக்மவிமானம், சுந்தவிமானம், ஆகியன சந்திர மண்டலத்திற்குச் சென்ற அப்போலோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிபுர விமானம் தரையிலும் நீரிலும் செல்லக்கூடியது. இதன் வேகம் குறைவானது. என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகுன விமானமானது நம்முடைய நவீன விமானத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடைப்பட்ட அமைப்பைக்கொண்டது. இந்த விமானம் மூலம் எந்தக் கிரகத்திற்கும் சென்றுவர முடியும். என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.

சங்க இலக்கியமான புறநானூறு மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சீவகசிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது.

அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ காண்பவர் மயிர்சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்கச்செய்யவோ முடியும் என்கின்றது அந்நூல்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயிற்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றிச்சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. சங்கஇலக்கியமான புறநானூற்றில் வலவன் ஏவா வான ஊர்தி (புறம் -27. 8)

என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்கின்ற கருத்து நம் தலையைச் சுற்ற வைக்கின்றது. விமான ஓட்டியை வலவன் எனஅழைக்கின்றது புறநானூறு. இது நிச்சயமாக கற்பனையில் உருவான கதை என கூற முடியாது.

புறநானூற்றுத்தமிழன் உண்மையில் நமக்கு முன்னோடிகளே! அந்த முன்னோட்டத்தை இன்றைய தமிழராகிய நாம் உணரவில்லை மாறாக தமிழை மறக்கவே முனைவது கவலையையே தருகின்றது. ஒரு காலத்தில் கற்பனையாக இருப்பது பிறிதொரு காலத்தில் நிஜமாகி விடுவதுண்டு உதாரணமாக ஜூல்வொர்னி என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உலகைச்சுற்றிவர எண்பது நாட்கள்.

எனும் கற்பனை நூலில் நீருக்கடியில் செல்லும் கப்பல்கள். சந்திர மண்டலத்திற்கு வான்வெளிக்கப்பல்களின் மூலம் பயணம் செய்வது பற்றியெல்லாம் எழுதியிருந்தார் ஆங்கிலத்தில் விமானப் பயணம் பற்றி எழுந்த நூல்களில் இதுவே முக்கியமானதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுந்த நூல்கள் எல்லாம் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னரே எழுந்தது எனலாம். விண்ணியல் பற்றிய வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதஇனம் அறிந்திருந்தது. ஆனால் இது எங்கே அறிமுகமானது எனத்தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல வேறு மொழிகளிலும் இவைபற்றிய அறிவுகாணப்பட்டது.

1232 களில் சீனத்தார்த்தாரி இனத்தவர்கள் ராக்கட்கள் பயன்படுத்தியதற்கான வரலாற்றுச்சான்றாக மொங்கோலிய அரசனான ஜெங்கிஸ்கானின் மகனான ஒக்டாயின் தலமையின்கீழ் மொங்கோலியர்கள் சீனத் தார்த்தாரியர்களின் காய்பெங்பூ நகரைத்தாக்கியபோது சீனர்கள் தமது நகரைக்காக்க ராக்கட்களை பயன்படுத்தினர். என்பதிலிருந்து அவர்கள் வானியல் பற்றி அறிந்திருந்தனர். என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இது பிற்பட்ட காலத்திலேயே இதை இவர்கள் அறிந்திருந்தனர் எனவே விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் நிச்சயமாக இந்துக்களாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் கி.பி.1280ல் ஹசன் அல்ரமா என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி ஒன்றில் ராக்கட்களை அமைப்பது விண்வெளியில் பயணத்தை மேற்கொள்வது அவற்றை எப்படி அமைப்பது வெடிமருந்து தயாரிப்பது என்பதுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கெதிராக 1780இல் இளவரசன் ஹைதர்அலிகான் ராக்கட் தாக்குதல் செய்து ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்தினான் என்றுஒரு குறிப்பும் உண்டு.

இவையும் பிற்பட்ட காலத்தில் எழுந்தவைகளே எனலாம். அத்துடன் கிறிஸ்துவின் காலத்திலும் வானதேவதைகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அதற்கு முன்னரே இந்து இலக்கியங்களில் விமானம் பற்றிய சிந்தனை காணப்படுகிறது.

சீன. மற்றும் இலத்தீன் மொழிகளில் விமானம் பற்றிய செய்திகள் அந்நூல்களில் காணப்பட்டாலும் அவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவைகளே! எனலாம் ஆகவே இந்துதர்மத்தைக் கூறுகின்ற புராணங்கள். இதிகாசங்கள் காப்பியங்கள். ஆகியவற்றில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விமானம் பற்றிய சிந்தனை இருந்திருக்கின்றது.

இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இவை கற்பனைக்கதை எனக் கூறினாலும் இதிலுள்ள விமானத் தொழில்நுட்பம் வியப்புக்குரியதே.

மூலம் : சூரியன். கொம்

படங்கள் : en.wikipedia.org

மூலத்துக்கான இணைப்பு இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 1:35 PM

8 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

இந்துக்களின் முன்னோடிச் சிந்தனையை இனங்காட்டும் கட்டுரையை பார்வைக்கு தந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

இந்து அன்பன்.

Wed Jan 09, 02:04:00 PM GMT  
Blogger பனிமலர் செப்பியவை...

வி இரவிசந்திரன் வின்னில் இருந்து மன்னிற்கு என்ற நூலில் குறிபிடுவார் இப்படி. உலகத்தில் விளக்கமுடியாத பெரிய பெரிய கட்டமையுகளும், விமானங்களும், பேரழிவு ஆயுதங்களும் ஆப்ரிகா, இசுரேல், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுவதும், அல்லது அவைகள் பர்றிய குறிப்புகள் காணப்படுவதும் வேற்றுலக மக்கள் பூமிக்கு வந்து போய் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவார். இதே கருத்தை கதையின் கருவாக கொண்டு 5th Element ஆங்கில படமும் உண்டு. இன்னமும் நட்ச்சத்திர மோதல் (star wars) படங்களில் இந்த கற்பனைகளுக்கு முழு அளவிலான வடிவம் கொடுத்து இருப்பார்கள். உங்களது கருத்துக்கு எதிர்வாதம் இல்லை, இப்படியும் ஒரு விளக்கம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள் உலகம் தழுவிய அளவில் என்று சொல்ல வந்தேன். தகவலுக்கு நன்றி.

Wed Jan 09, 07:41:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றிகள்.

Wed Jan 09, 10:55:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

இந்துக்களான பழந்தமிழர்
???????????????????

Wed Jan 09, 11:42:00 PM GMT  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) செப்பியவை...

அப்போ வயல் உழ மாடு, வண்டியிழுக்க குதிரை,கழுதை,மாடு.
கப்பல் ஓடக் காற்று
பலவேலைகளை தாமே கடும் உழைப்பால் செய்தது ஏன்??
இதுக் கெல்லாம் இயந்திரம் கண்டு பிடிக்காமல் ,பறக்க மாத்திரம் விமானம் கண்டு பிடித்தது ஏன்??
உண்மையில் புரியாமல் தான் கேட்கிறேன்.

Thu Jan 10, 12:12:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

ஏன் யோகன் தேர்கள், ஓடங்கள் இராமாயன இலக்கியத்திலேயே இடம்பெற்றுள்ளதுதானே. அவை பொறிகள் அன்றி வேறென்ன..???!

பண்டைத் தமிழர்கள் இந்துக்களாக இருந்துள்ளதற்கு பல சான்றுகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

அதுமட்டுமன்றி பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைக்கு கோவில்களும் சிற்பங்களும் இன்றும் சான்றுபகர்கின்றனவே..!

Thu Jan 10, 02:23:00 AM GMT  
Blogger Unknown செப்பியவை...

அய்யா குருவி....

நீங்கள் குறிப்பிடும் மயூரனின் கட்டுரை குறித்து பல எதிர்வினைகள் வந்து, அக்கட்டுரை வெளிவந்த இணைய தளத்தில் இருந்து அதை நீக்கியேவிட்டனர். நீர் தூர்தர்ஷனை போல அனைவரும் படித்த முடித்த செய்தியை அப்படியே தந்துள்ளீர். நல்ல காமெடி. விமானத்தை கண்டுபிடித்தவன் இதை படிக்க நேர்ந்தால் எதால் சிரிப்பான் எனத்தெரியவில்லை.

எந்த ஒரு கண்டுபிடிப்பும், காலத்தின் ஏடுகளில் இருந்து திடீரென மறந்துவிடுமா?? மனித குல வளர்ச்சி., வரலாறு, அறிவியல் என ஆயிரம் உள்ளது, அதையெல்லாம் சற்று படித்துவிட்டு அறிவியற் கட்டுரைகளை பதிவிடுங்கள். பறவையை கண்ட அனைத்து மனிதனின் கனவிலும் பறப்பது குறித்த இயலாமையும், ஆச்சரியமும் நிறைந்திருக்கிறது. அவையே புராணங்களாக வடிவம் பெற்றது.

விக்கியில் செப்படிவித்தை அறிவியல் () என்ற தலைப்பின் கீழ், ஒரு சாமியார் (சுப்பராய சாஸ்திரி) சாமியாடும் பொழுது சொல்லிய சுலோகங்கள் ஒரு ஆங்கில கிறுக்கனால் மொழி பெயர்க்கப்பட்டு அது 1950களில் பதிக்கப்பெற்றது. தெளிவான குறிப்புகள் மற்றும் அறிவியலுக்கு மிக அருகில் வரும் விமான திட்ட வரைவுகள் லியானார்டோ'வின் கையெழுத்துப்பிரதியில் காணக்கிடைக்கிறது, அதை செயல் முறைக்கு கொண்டுவரவே அறிவியலர்களுக்கு 300 ஆண்டுகள் பிடித்தது.

டாவின்சி எழுத நேர்ந்தால், அவர்களின் முன்னோர்களே விமானம் குறித்த அறிவிற் சிறந்தவர் என எழுத இயலும், எனினும் அவர் அப்படி எழுதமாட்டார், ஏனெனில் அவர் இந்துவுமல்ல, சுலோகம் சொல்லுபவரும் அல்ல, உண்மையான அறிவியல் அறிஞன். எனவே குருவி, நீங்கள் மேலும் பறந்து திரிந்து மேலதிக உண்மையுடன் கூடிய செய்திகளை வெளியிட வேண்டும். :)

Thu Jan 10, 01:37:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

இசை அவர்களே உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

மயூரனின் கட்டுரைக்கான நேரடி இணைப்பை வழங்கியே உள்ளேன். சூரியன்.கொமிலிருந்து. அங்குதான் இது முதலில் பிரசுரமானது.

மயூரன் முடிந்த முடிவை.. எழுதவில்லை. அவர் விமானம் என்ற ஒன்றில் பறப்புச் செய்தல்.. (மனிதன் தான் இறக்கை கட்டிப் பறவை போல பறக்க சிந்திப்பது புதிதல்ல. ஆனால் விமானம் அல்லது கருவி ஒன்றின் துணையுடன் பறக்க முடியும் என்ற சிந்தனை செய்தல்) என்பதையே இந்துக்களின் இலக்கிய வடிவங்களூடு எடுத்துத் தர முயன்றுள்ளார்.

அதில் வாதப் பிரதிவாதம் இருக்கலாம். அதற்காக மயூரனின் கட்டுரை.. ஒரு இந்துவெறியின் வெளிப்பாடு என்பது மோசமான இந்து எதிர்ப்பு வெறி என்றே நான் கருதுகிறேன். இப்படியான வெறித்தனமான பார்வைகளால் நாம் உணராமல் தொலைத்த அல்லது தேடாமல் விட்ட விடயங்கள் பல.

இந்த இந்து எதிர்ப்பு வெறிக்கூட்டம் தேடிக் காட்டினதெல்லாம்.. இந்துவை சீரழிக்க காலத்துக்கு காலம் பிற மதத்தவரால் திணிக்கப்பட்ட கூடாதவற்றையே..!

நான் இந்துவை புகழ வேண்டும் என்று சொல்ல அல்ல இதை எழுதுகிறேன். பண்டைய எழுத்துக்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆழமான சிந்தனைகளை இந்து.. சைவம்.. வைஸ்ணவம் என்று பிரித்துப் பார்த்து துவேசித்து பாழடிக்காமல்.. அவற்றுக்குள்ளும் தேடல் செய்வது நல்லம்.

மேற்கத்தையவர்கள் பழைய ஓவியங்களை.. இலக்கியங்களை ஆராய்ந்துதான் பல அற்புதமான கருத்தியல் சிந்தனைகளுக்கான மூலத்தைப் பெற்றனர். ஆனால்.. நாம் எதைச் செய்தம். உள்ளதையும் ஆராயாமல் தூசித்து குப்பையில் போட்டுவிட்டு.. அடுத்தவரின் உழைப்பால் பெறப்பட்டத்தைக் கொண்டு எம்மை உயர்விக்கலாம் என்று காத்திருக்கிறேம்.

இதுதான் தங்கி வாழல் என்பது..! நம்மவர்கள் இதற்கு பழகிவிட்டார்கள். இலகுவில் இதை விட்டு வரமாட்டார்கள். அதற்கேற்ப எந்த முயற்சியையும் முளையிலேயே கிள்ளி எறிவதையே செய்வர்.

இந்து என்று எழுந்தாலே சிலருக்கு இந்திய அரசியலை விட வேறு ஒன்றும் எண்ணத்தில் ஓடுதில்லை. அந்தளவுக்கு அவர்களின் எண்ணங்களைக் குறுகியதாக்கி வைத்திருக்கின்றனர்... இந்திய அரசியல்வாதிகள்..!

அரசியல்வாதிகளின் பேச்சில் அறிவியலைக் காணுற கூட்டத்தோட... பகுத்தறிவைக் காணுற கூட்டத்தோட.. இவ்வாறான விடயங்களை அறிவியல் வழியில் நடுநிலை நின்று அலசிறது சாத்தியமில்லை என்பது தெரியும் இருந்தாலும் எனது எண்ணத்தில் மயூரனின் நோக்கம் பற்றிய ஒரு தெளிவு இருந்ததால் இக்கட்டுரையை இங்கே இணைத்தேன்.

நான் இந்து வெறியனும் அல்லன்.. இந்து எதிர்ப்பு வெறியனும் அல்ல. நான் இயற்கையில் உருவான மனிதன்.. குருவி... இவற்றில் ஒன்று..!

Thu Jan 10, 06:01:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க