Monday, May 23, 2011

சிறகடிக்க முயலும் சிறகொடிந்த வன்னிச் சிட்டு.



தங்கச்சி.. புள்ள..

என்னம்மா..

எங்க புள்ள போயிட்டு வாறா..?!

உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன்.

ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன்.

ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு காசு கொடுத்தவர் தானேம்மா. அதோட ஆமிக்கார பெரியவன் 5 இலட்சம் கேட்க அதையும் புரட்டிக் கொடுத்தவர் எல்லோ. அதுகளையும் மறக்கக் கூடாது தானேம்மா. அதுதான் வந்து நிக்கிறார் என்று சுபா போனடிச்சுச் சொன்னாள். போய் பார்த்திட்டு வந்தன் அம்மா.

உன்னை போய் பார்க்க வேண்டாம் என்று சொல்லேல்ல புள்ள. தனியப் போகாத என்று தான் சொல்ல வாறன். உவங்கள் ஆமி சி ஐ டி மார் உதுகளுக்கு நின்று எங்கட தேசப் பிள்ளைகளை (முன்னாள் போராளிகளை) கவனிக்கிறாங்கள். அவைட நடமாட்டங்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்க்கிறாங்கள். அதால தான் சொன்னனான். பிறகு உனக்கும் பிரச்சனை கணேஷ் மாமாவுக்கும் பிரச்சனை வந்திடும் புள்ள. சரி அதுகிடக்கட்டும்.. கணேஷ் மாமா என்ன சொன்னவர்..

அவர் என்னம்மா சொல்லுறது. நேற்றிரவு தானாம் வன்னிக்கு வந்து சேர்ந்தவை. கொழும்பில கிளியரன்ஸ் கொடுக்க இரண்டு கிழமை எடுத்திட்டாங்களாம். மூன்று கிழமை தானாம் லீவு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எங்கட குடும்ப நிலைமையை இட்டு சரியா மனசு கஸ்டப்படுறார் போல. மனிசிக்காரி நான் போனதும் கூட வந்து கணேஷ் மாமா பக்கத்திலேயே நின்று கொண்டா. ஏதேனும் தந்திடுவாரோ என்று நினைச்சிட்டா போல..! ஆனால் அவர் அவா அங்கால கொஞ்ச நேரம் போயிட்டு வாறத்துக்குள்ள... என்னட்டச் சொன்னார் நான் உன்னை வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிக்கிறன். முடியல்ல என்றால் உன்னை கலியாணம் கட்டியாவது கூட்டிக் கொண்டு போறன் என்று. சமூகத்துக்கு பயந்து வாழ வேண்டிய ஒரு உயிரை அழிய விடுறதை விட.. அதை வாழ வைக்கிறது தப்பில்லை தானே என்று வேற சொல்லுறார்.

என்ன.. உன்னை கலியாணம் கட்டப் போராராமோ. அவருக்கு தானே குடும்பம் குட்டி என்று இருக்குது. 15 வயசில மகளும் இருக்குது.

இல்ல அம்மா.. அவர் ஒன்றும் உடம்பு சுகத்துக்காக என்னைக் கட்டல்ல. என்னை வெளிநாட்டுக்கு எடுக்கிறதுக்காக கட்டிறன் என்றார். இங்க இருந்தா எப்பையும் ஆபத்து வரும் என்று சொல்லுறார்.

ஓ... அப்படிச் சொன்னாரா.. அப்ப அதுக்கு நீ என்ன சொன்னா..

நான் என்னத்தை அம்மா சொல்லுறது. அம்மாவும் நீங்களும் பேசி என்ன முடிவு எடுக்குறீங்களோ அதுக்கு நான் கட்டுப்படுறன் என்று சொல்லீட்டன் அம்மா. அப்படி சொல்லிட்டு நிக்க கணேஷ் மாமாட மனிசி வந்திட்டா. அவர் சொன்னார் நான் பிறகு அம்மாவோட கதைக்கிறன் என்று.

ஏதோ புள்ள.. முருகண்டியான் அருளால.. உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சாலே போதும். நான் இவள் கடைக்குட்டியை வளர்த்து எடுத்திடுவன். உன்னால தான் புள்ள எனக்கு சதா கவலை. பாப்பம்.. கணேஷ் வந்து கதைச்சா கெஞ்சிக் கூத்தாடியாவது உன்னை அங்காலப் பக்கம் கூப்பிடச் சொல்லி சொல்லுறன். அவள் கணேஷ்ன்ர மனிசி.. பெரிய பொம்பிளப் புரட்சி எல்லாம் கதைப்பாள்.. மனிசன்காரனை ஒரு உதவி செய்ய விட மாட்டாள்..!

சும்மா கதைக்கலாம்... எழுதலாம் அம்மா. கதையில மற்றவையிட கஸ்டத்தை சொல்லுறவை.. அதை தாங்கள் சந்திக்க தயாரா துணிஞ்சு நிப்பினமோ. அப்படி நின்றிருந்தா ஏனம்மா முள்ளிவாய்க்காலுக்க அழிஞ்சு போறம்..! எனக்கு கணேஷ் மாமாவில நம்பிக்கை இருக்கு. அவர் மனிசிக்கு பயப்பிடுற ஆளில்ல.. மனிசிக்கு மரியாதை குடுக்கிறவர்.. ஆனால் பயமில்லாத ஆள். இவ்வளவுக்கும் அவர் மட்டும் தானேம்மா சொந்தம் என்று சொல்லி உதவி செய்திருக்கிறார்.. பாப்பம்.. எதிர்காலத்திலும் என்ன செய்யுறார் என்று.

சரி புள்ள.. ஏதோ எல்லாம் கடவுள் விட்ட வழி. நான் உதில வெள்ளை அரிசிக் கஞ்சி வடிச்சு வைச்சிருக்கிறன்.. இரண்டு உப்பு கல்லை எடுத்துப் போட்டிட்டு குடிச்சிட்டு அந்த மரக்கறியள வெட்டி வை புள்ள. நான்.. பக்கத்துக் கடைக்குப் போய் இரண்டு சோடா வேண்டிக் கொண்டு வந்து வைக்கிறன். கணேஷன் வந்தாலும் குடுக்க ஒண்டுமில்ல.

ஓமம்மா. கெதியா போயிட்டு ஓடியாங்கோ..!

சரி புள்ள..!

முழுதும் கற்பனை அல்ல.)

(நன்றி யாழ்.)

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:05 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க