Wednesday, March 14, 2012

காவலுக்கு வந்தோர் காட்டிக்கொடுக்கப்பட்ட அநியாயம்.

பாலன் பிறக்கிறான்
சேதி கேட்டு..
வேட்டை ஆரம்பம்
கொலைகளின் நடுவே
இரத்த ஆற்றில்..
அவன் வாழ்வு..!
அற்புதங்கள் செய்கிறான்
ஏழை மக்களை கவர்கிறான்
சண்டாளர்களின் சாவில் இருந்து..
மக்களை காக்க 
சொற் கருவி ஏந்துகிறான்..!
ஆட்சியாளர்களின்
கர்வமும் கோபமும் பொங்க..
முட்கிரீடம் தரித்து
சிலுவையில்
உலோகங்களால் குத்தப்பட்டு
மரிக்கிறான்.
அங்கும்
மனித உரிமை மீறல்கள்
நீதி விசாரணை இன்றி..
2012 ஆண்டுகள்..!

இவன்
1950 களில் பிறக்கிறான்
காலத்தின் கோலமாய்
சாதாரணமாய் வளர்கிறான்.
சிங்களப் பேரின
அரக்கர் தம் கொடுமை காண்கிறான்.
மக்களைக் காக்க
கருவி ஏந்துகிறான்
பேரின ஆட்சியாளரின்
கடலொடு நிலம் ஆகாயம் விழுங்கிகளின்
கொலைவெறிக்கு
இனவெறிக்கு..
உலோகங்களால்
குத்தப்பட்டு
மரிக்கிறான்
இங்கும்..
மனித உரிமை மீறல்கள்
நீதி விசாரணை இன்றி
3 ஆண்டுகள்..!

ஏன், எதற்கு..
கேள்வி கூட
இன்றி
பயங்கரவாத உச்சரிப்பின்
அறியாமையில்
பயத்தில் மக்கள்..!
சாவுக்கு அஞ்சிய
மனிதன்..
கருவிகள் கொண்டோரின்
அழிவுகளால்
ஆளப்படும் கொடுமை..!

இந்த நிலை போக்க
இறை தூதன் வரான்..
நாம் தான்
போராடியாக வேண்டும்..!
2012 ஆண்டுகள்
முன் தேடி
இருக்க வேண்டிய
தீர்வு..
எட்டப்படாததால்
2012 ஆண்டுகள் பின்னும்..
அதே நிலை..!
இந்த நிலை
இன்னும் தொடர வேண்டுமா..
மனித இனம்
இடர்வேளை கடந்து..
மீள வேண்டாமா..??!
"மனித உரிமை மீறல்"
வார்த்தை
அகல வேண்டாமா..??!
சிந்திப்போம்..!
சிறைகள் உடைப்போம்..
வாழும் உரிமை பறிப்போர்
நிலை தகர்த்து
மனித
உரிமை காப்போம்..!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:36 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க