Tuesday, March 11, 2008

றுக்சானா - உண்மைக் கதை



ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி.

எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள்.

15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள்.

15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் செல்கின்றனர்.

செல்லும் வழியில் விமான நிலையத்தில் சொல்கின்றனர் எனி நீ திரும்பி வரமாட்டாய். உனக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்று.

அவர்கள் சொல்லியது போலவே பாகிஸ்தான் மண்ணில் அங்குள்ள ஒரு இஸ்லாமிய ஆணுக்கு அவள் கட்டாய (அதாவது சிறுமியின் மொத்த விருப்புக்கும் புறம்பாக) திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.

அதன் பின்..

அவள் வாழ்க்கையில் சிறுமிக்குரிய கனவுகள் வீசிய தென்றல் அல்ல உணரப்பட்டது.. ஒரு கொடூர ஆணின் அகோரத்தனம் வெளிப்பட்டது. அந்தக் கட்டாயத் திருமணம் என்ற புயல் வீசி ஓய்ந்த போது அவள் பாலியல் வன்முறைக்கு இலக்காகி 15 வயதிலேயே ஒரு கருவையும் சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து தப்பி மீண்டு வந்து விடுகிறாள் இங்கிலாந்து மண்ணுக்கு..!

வந்தவளை மீண்டும் தொடர்கிறான் அந்த ஆண். அவனும் இங்கிலாந்து வருகிறான். வாழ்க்கை ஒட்டவே இல்லை. சிறுமி விலகி ஓடுகிறாள்...

தற்போது சிறுமி இங்கிலாந்து அரசு சார் புகலிடமொன்றில் அடைக்கலம் புகுந்திருக்கிறாள். அவள் இன்று தன்னிலைக்காக இங்கிலாந்து அதிகாரிகளைக் குற்றம் சுமத்துகிறாள்.

காரணம்.. அவள் 12 வயதாக இருக்கும் போது தான் வீட்டு வன்முறைக்கு இலக்காவதாகவும் கட்டாயத் திருமணத்துக்காக வற்புறுத்துவதாகவும் செய்த முறைப்பாட்டை சரிவரக் கையாண்டிருந்தால் தான் இன்று இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டேன் எங்கிறாள்.

இதே ஒரு முறைப்பாட்டை வெள்ளையின பெண்பிள்ளை செய்திருந்தாள் அவளுக்கு இப்படி ஒரு நிலை தோன்ற பிரிட்டன் அனுமதித்திருக்குமா என்று நீதி கேட்கிறாள் இன்று தன் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு அந்தச் சிறுமி.

ஜி சி எஸ் சியைக் கூட நான் தொட முடியல்ல எனக்கு கல்லூரி.. யுனி என்று போக எல்லாம் ஆசை இருந்தது. எல்லாமே வீணாகிடுச்சு. திருமணமே எனக்குப் பிடிக்கல்ல எங்கிறாள் எதிர்காலத்தை தொலைச்சிட்டமே என்ற அதிர்ச்சியில் அந்தச் சிறுமி.

அப்பாவிகளின் (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) குரலுக்கு பெறுமதி இல்லையே தோழி..!

எல்லாம் முடிந்த பின்.. விசாரிக்க மட்டும் ஆயிரம் பேர் வருவர் போவர். செய்தியாக்கி வாசித்து முடிப்பர். பயனென்ன.. நாளை இன்னொருத்தி இப்படி விபரிக்கும் வரை... எத்தனை எத்தனையோ.. சீரழிவுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகின்றன.

ஆண்களுக்கும் தான். எல்லாருமே கொஞ்சம் நெஞ்சில் ஈரம் வைச்சுக்குங்க.

சுட்டது இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:45 AM

1 மறுமொழி:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) செப்பியவை...

திருடராகப் பார்த்துத் திருந்தினால் தான் மாற்றம் வரவாய்ப்பு உண்டு.சட்டம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்க முடியாது.

Tue Mar 11, 12:34:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க